Aug 01, 2017 09:13 AM

கதிருக்கு வில்லனாகும் லகுபரன்!

கதிருக்கு வில்லனாகும் லகுபரன்!

’போங்கு’ படத்தை தொடர்ந்து ஆர்.டி.இன்பினிட்டி டீக் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் ரகுகுமார் என்கிற ராஜரத்தினம், ஸ்ரீதரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் ‘சத்ரு’.

 

இதில் ஹீரோவாக கதிர் நடிக்க ஹீரோயினாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். மற்றும் பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, ரிஷி, சுஜா வாருணி, பவன், அர்ஜுன் ராம், ரகுநாத், கீயன், சாது, குருமூர்த்தி, பாலா மற்றும் பலர் நடிக்கிறார்கள். ’ராட்டினம்’ படத்தில் ஹீரோவாக நடித்த லகுபரன் இப்படத்தின் வில்லனாக நடிக்கிறார்.

 

மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அம்ரிஷ் இசையமைக்க, கபிலன், மதன் கார்க்கி, சொற்கோ ஆகியோர் பாடல்கள் எழுதுகிறார்கள். பிரசன்னா ஜி.கே எடிட்டிங் செய்ய, ராஜா மோகன் கலையை நிர்மாணிக்கிறார். விக்கி ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைக்கிறார்.

 

இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் நவீன் நஞ்சுண்டான் படம் குறித்து கூறுகையில், “இது ஒரு ஆக்‌ஷன் திரில்லர் படம். 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்கள். ஒவ்வொரு ரசிகனும் சீட் நுனியில் அமர்ந்து தான் பார்க்கத் தோணும். வளர்ந்து கொண்டிருக்கும் நடிகர்களில் பிரகாசமானவர் கதிர். அவரது உடல் வாகுக்கு ஏற்ற மாதிரி பொருத்தமான கதாபாத்திரம் இதில் இருக்கு. 

 

கதிர் என்கிற மிடுக்கான போலீஸ் அதிகாரி வேடம் அவருக்கு. முதல் முறையாக போலீஸ் வேடம் ஏற்கிற நடிகர்களுக்கு அந்த படம் நட்சத்திர அந்தஸ்தை ஏற்படுத்தி தரும் என்பது சினிமா பார்முலா. அந்த பிரகாசம் கதிருக்கும் உண்டு. அவருக்கு ஜோடியாக சிருஷ்டி டாங்கே பொருந்தி போகிறார். தவறு செய்கிறவர்களுக்கு சட்டம் தராத தண்டனையை ஒரு தனி மனிதன் தருகிற கதை தான் சத்ரு. 

 

படத்திற்கு தேவையான செலவு செய்த தயாரிப்பாளர்கள் ரொம்பவும் பாராட்டுக்குரியவர்கள். கூடிய விரைவில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்க இருக்கிறது.” என்றார்.