Oct 21, 2017 08:42 AM

பல கோடிகளை போட்டு படம் எடுக்கும் லைகாவால் கண்ணீர் விடும் உதவி இயக்குநர்!

பல கோடிகளை போட்டு படம் எடுக்கும் லைகாவால் கண்ணீர் விடும் உதவி இயக்குநர்!

ரஜினிகாந்த் நடிப்பில், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், 450 கோடி ரூபாய் பட்ஜெட், ஆடியோ ரிலீஸ் விழாவுக்கே சுமார் 15 கோடி ரூபாய் செலவு, என பிரம்மாண்ட தகவல்களை வெளியிட்டுக் கொண்டிருக்கும் லைகா நிறுவனத்தால் உதவி இயக்குநர் ஒருவர் குடும்பத்தோடு கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கிறார்.

 

முரளி மனோகர் என்ற அந்த உதவி இயக்குநர் ‘2.0’ படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்து வரும் நிலையில், அவருக்கு பல மாதங்களாக சம்பளம் தரப்படவில்லையாம். இது குறித்து அவர் பலரிடம் முறையிட்டும் எந்த பதிலும் கிடைக்கவில்லையாம். கர்ப்பிணி மனைவி, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தை ஆகியோருக்கான மருத்துவ செலவுக்கு பணம் இல்லாமல் திண்டாடும் அந்த உதவி இயக்குநர் தனது சோகத்தை பேஸ்புக் மூலம் பகிர்ந்துக்கொண்டிருக்கிறார்.

 

இது குறித்து உதவி இயக்குநர் முரளி மனோகர் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள பதிவில், “இனி காத்திருப்பதில் அர்த்தமேயில்லை. 2.0-க்காக கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து டப்பிங்கின் முழுப் பொறுப்பேற்று நான், வேலை செய்து வருவது ஊடகவியலாளர்கள், தோழர்கள் அனைவருக்கும் தெரியும். டப்பிங்கின் போது ரஜினி சார் தனிப்பட்ட முறையில் என்னிடம் பேசியதும் செய்தியானது. செய்திக்காக எதையும் பரப்புவனல்ல நான்.

 

பொறுத்துப் பொறுத்துப் பார்த்து மிகுந்த மன வேதனையுடன் இதைப் பதிவு செய்கிறேன்.

 

கர்ப்பத்தில் ஐந்து மாதக் குழந்தையைச் சுமக்கும் என் மனைவி, என் மகன் மருதனுக்குக் காய்ச்சல் என எவ்வளவோ மன்றாடியும் கடந்த மாதத்திற்கான சம்பளம் இன்னும் எனக்கு மட்டும் வழங்கப்படவில்லை. இந்த மாதமும் வேலை செய்துகொண்டு தான் இருக்கிறேன். உண்மையைச் சொல்லியும், யாரிடமுமே எந்தப் பதிலும் இல்லை.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கோடி கோடியாய் செலவு செய்து படம் தயாரிக்கும் லைகா நிறுவனம், அதில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கும் பல கோடிகளை வாரி இறைத்து வரும் நிலையில், இப்படிப்பட்ட உழைப்பாளிகளுக்கு மட்டும் ஊதியம் வழங்காமல் கண்ணீர் விட வைத்திருப்பதை, யார் எப்படி தட்டி கேட்கப்போகிறார்களோ!