Oct 21, 2017 09:10 AM

‘மெர்சல்’ பிரச்சினையில் மவுனம் காக்கும் விஷால் - பா.ஜ.க வுக்கு ஆதரவா?

‘மெர்சல்’ பிரச்சினையில் மவுனம் காக்கும் விஷால் - பா.ஜ.க வுக்கு ஆதரவா?

நடிகர் சங்கத்தின் செயலாளராகவும், தமிழ்த் திரைப்பட சங்கத்தின் தலைவராகவும் இருக்கும் நடிகர் விஷால், பல்வேறு பிரச்சினைகளில் அதிரடியான முடிவுகளை மேற்கொண்டு தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், ‘மெர்சல்’ படத்திற்கு எதிராக எழுந்துள்ள பிரச்சினையில் மட்டும் எந்தவித கருத்தும் கூறாமல் மவுனம் காத்து வருகிறார்.

 

பைரசியை ஒழிப்பதற்காக ரோட்டில் இறங்கி போராடும் விஷால், தியேட்டர்களில் டிக்கெட் விலை மற்றும் ஆன்லைன் புக்கிங்கின் கூடுதல் கட்டணம் போன்றவைகளை கட்டுப்படுத்தி தயாரிப்பாளர்களுக்கு வருமானம் ஈட்டி தரும் நடவடிக்கையில் இறங்கியுள்ள விஷால், தயாரிப்பாளர் ஒருவரை அரசியல் கட்சி ஒன்று மிரட்டியுள்ளதற்கு மட்டும் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருப்பது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

 

விஜயின் ‘மெர்சல்’ படத்தில் இடம்பெற்றுள்ள சில குறிப்பிட்ட வசனங்களை நீக்க வேண்டும். இல்லையெனில் படம் திரையரங்குகளில் ஓடாது, என்று தமிழக பா.ஜ.க-வினர் மிரட்டல் விடுத்ததால், அப்படத்தில் உள்ள 4 காட்சிகளை நீக்க தயாரிப்பு தரப்பு முன்வந்துள்ளது. அதே சமயம், கருத்து சுதந்திரத்தின் அடிப்படையிலேயே மெர்சல் படத்தில் உள்ள வசனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. எனவே, எந்த காட்சிகளையும் நீக்க வேண்டிய அவசியம் இல்லை, என்று சென்சார் குழுவு அறிவித்துள்ளது. மேலும், நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் பா.ரஞ்சித் ஆகியோர் மெர்சல் படத்தில் இருந்து காட்சிகளை நீக்க வேண்டியதில்லை, என்று கூறியுள்ளனர்.

 

அதேபோல், தொல்.திருமாவளவன், வைகோ, பா.சிதம்பரம் போன்ற அரசியல் தலைவர்களும் மெர்சல் படத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

 

ஆனால், ஒரு தயாரிப்பாளருக்கு ஆதரவு கரம் நீட்ட வேண்டிய, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மட்டும், இந்த விவகாரத்தில் எந்தவித கருத்தும் இதுவரை தெரிவிக்கவில்லை.

 

தமிழக அரசின் கேளிக்கை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுபடங்களை வெளியிட தடை விதித்த தயாரிப்பாளர் சங்கம், மெர்சல் வெளியீட்டில் எந்தவித சிக்கலும் ஏற்படாது, அதற்குள்ளாகவே நல்ல முடிவு வரும், என்று கூறியதோடு, தடையையையும் திரும்ப பெற்றது. ஆனால், தற்போது ஒரு தயாரிப்பாளருக்கு பா.ஜ.க மிரட்டல் விடுத்தும், அதற்கு எந்தவித கண்டனமும் காட்டாமல் மவுனம் காத்து வருவதற்கு காரணம், விஷாலின் பா.ஜ.க பாசம் தான் என்று கூறப்படுகிறது.

 

ஏற்கனவே, பிரதமர் மோடியை விஷால் சந்திக்க இருக்கிறார் என்று தகவல் வெளியாகியதோடு, தமிழக பா.ஜ.க-வில் விஷால் முக்கிய பொறுப்பேற்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

 

இந்த நிலையில், ‘மெர்சல்’ படத்திற்கு பா.ஜ.க எதிர்ப்பு தெரிவித்தும், அக்கட்சிக்கு விஷால் எந்த வித கண்டனமும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருவது, அவரது பா.ஜ.க-வின் ஆதர்வையே காட்டுவதாக பேசப்பட்டு வருகிறது.

 

இதற்கு முற்றுப்புள்ளி வைக்க விஷால் தனது மவுனத்தை கலைப்பாரா, என்று பொருத்திருந்து பார்ப்போம்.