Oct 24, 2017 07:01 AM

புதிய வகையில் கதை நகர்த்தலை கையாண்டிருக்கும் ‘வீரையன்’

புதிய வகையில் கதை நகர்த்தலை கையாண்டிருக்கும் ‘வீரையன்’

90-களின் காலகட்டத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் “வீரையன்”. இப்படம் ஒரு பக்கம் தந்தை - மகன், இன்னொரு பக்கம் காதலர்கள், மற்றொரு பக்கம் சமூகத்தால் கேவலமாக நடத்தப்படும் மூன்று உதவாக்கரைகள் என குடும்பம், காதல், நட்பு ஆகிய மூன்று கோணங்களில் ஆரம்பமாகும்.

 

ஆரம்பித்த 15 நிமிடங்களிலேயே இந்த மூன்றும் ஒரு புள்ளியில் இணைந்து பயணிக்க ஆரம்பித்து பார்வையாளர்களை சுவாரஸ்யத்தில் ஆழ்த்தும்.

 

சோழ மன்னன் வாழ்ந்த உயர்ந்த பூமியான தஞ்சாவூர், கால ஓட்டத்தில் தடம் புரண்டு மக்களின் பயன்பாட்டில் எவ்வாறு இருக்கிறது என்பதையும், தஞ்சை மக்களின் நம்பிக்கையையும், மரியாதையையும் வலியுறுத்தும் கதையாகவும் உருவாகி இருக்கிறது இப்படம்.

 

பொதுவாக கதாநாயகன், கதாநாயகி, வில்லன், காமெடியன் என்ற வழக்கமான சினிமாவின் கட்டமைப்புக்கு அப்பார்ப்பட்டதாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. கதாபாத்திரங்களின் நியாய, தர்மங்களை சொல்லும், சூழ்நிலைகளும், சம்பவங்களுமே கதையை முன்னோக்கி எடுத்து செல்லும். இது புதிய வகை எதார்த்தவாதம் என்ற கோட்பாட்டு வகையைச் சார்ந்தது

 

5 பாடல்கள் மற்றும் 4 சண்டைக் காட்சிகளுடனான இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் திருநங்கை கதாபாத்திரமும், ’சரசம்மா’ என்கிற ஆவி கதாபாத்திரமும் முக்கியமான தவிர்க்க முடியாத கதாபாத்திரங்களாகும்.

இத்திரைப்படம் நவம்பரில் திரைக்கு வரவிருக்கிறது.  

 

இப்படத்தில் நாயகனாக இனிகோ பிரபாகர் நடிக்க, நாயகியாக ஷைனி நடித்துள்ளார். இவர்களுடன் ‘ஆடுகளம்’ நரேன், வேலா ராமமூர்த்தி, கயல் வின்சென்ட், ‘ஆரண்ய காண்டம்’ வசந்த், யூகித், ஹேமா மற்றும் திருநங்கை பிரீத்திஷா ஆகியோர் நடித்துள்ளார்கள்.

 

எஸ்.என்.அருணகிரி இசையமைத்துள்ள இப்படத்திற்கு பி.வி.முருகேஷா ஒளிப்பதிவு செய்ய, ராஜா முகமது படத்தொகுப்பு செய்துள்ளார். யுகபாரதி பாடல்கள் எழுத, சரவண ராஜா நடனத்தையும், ராக் பிரபு ஆக்‌ஷன் காட்சிகளையும் வடிவமைத்துள்ளனர்.

 

இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி தயாரித்திருக்கிறார் எஸ்.பரீத். படம் வரும் நவம்பர் மாதம் வெளியாக உள்ளது.