Aug 01, 2017 03:35 PM

தமிழில் அரசியல் தொடர்பான படம் எடுப்பது ஆபத்து - இயக்குநர் அருண் வைத்தியநாதன்

தமிழில் அரசியல் தொடர்பான படம் எடுப்பது ஆபத்து - இயக்குநர் அருண் வைத்தியநாதன்

‘அச்சமுண்டு அச்சமுண்டு’ படத்தையடுத்து மோகன்லால் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற ‘பெருச்சாழி’ படத்தை இயக்கிய அருண் வைத்தியநாதன் இயக்கத்தில், அர்ஜூன், பிரசன்னா, வரலட்சுமி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘நிபுணன்’ மாபெரும் வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

 

ரசிகர்களின் வரவேற்போடும், ஊடகத்தின் பாராட்டோடும் ஓடிக்கொண்டிருக்கும் ‘நிபுணன்’ வெற்றியை கொண்டாடும் விதத்தில் இன்று பத்திரிகையாளர்களை படக்குழுவினர் சந்தித்தனர். இதில் அர்ஜூன், அருண் வைத்தியநாதன் மற்றும் தயாரிப்பாளர்கள் கலந்துக்கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் பேசிய அருண் வைத்தியநாதன், “பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ள இந்த காலக்கட்டத்தில் ஒரு திரைப்படம் ஓடுவது என்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. இந்த நிலையில், எங்களது ‘நிபுணன்’ மிகப்பெரிய வெற்றி பெற்றதற்கு ஊடகங்களின் விமர்சனம் முக்கிய காரணம், அதற்காகவே இந்த நன்றி அறிவிப்பு விழா. தற்போது திரையரங்கங்களில் டிக்கெட் விலை உயர்ந்துள்ளதாக சொல்கிறார்கள், ஆனால் அவ்வளவு பெரிய உயர்வு அல்ல என்பது தான் எனது கருத்து. ஒடு ஓட்டலில் ஒரு தோசை, ஒரு காபி சாப்பிட்டாலே தற்போது 100 ரூபாய் ஆகும் காலக்கட்டத்தில் சினிமா டிக்கெட் விலை பெரிய உயர்வல்ல.

 

என்னதான், கதை எழுதினாலும் அதை திரைப்படமாக கொடுக்க நல்ல தொழில்நுட்ப கலைஞர்களும், நல்ல நடிகர்களும் முக்கியம். அந்த வகையில் இந்த கதையை கேட்டு நடிக்க சம்மதம் தெரிவித்த அர்ஜூன் சார், எனது நண்பன் பிரசன்னா, வரலட்சுமி, ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா என அனைவருக்கும் எனது நன்றி.” என்றவரிடம், மலையாளத்தில் எடுத்த ‘பெருச்சாழி’ போன்ற அரசியல் படம் தமிழில் எடுப்பீர்களா? என்று கேட்டதற்கு, “அப்படி ஒரு படத்தை இங்கே எடுத்தால், நான் அமெரிக்காவுக்கு செல்ல நேரிடம், பிறகு இங்கே வரவே முடியாது. 

 

நடிகர்கள் யாராவது அப்படி ஒரு படத்தில் நடிக்க சம்மதித்தால், வேறு அரசியல் கதை எதற்கு பெருச்சாழி படத்தையே தமிழில் எடுக்கலாம். ஆனால், அப்படி ஒரு அரசியல் படம் தமிழில் எடுக்க முடியாது என்பது தான் உண்மை. ஏனென்றால் இங்கு சகிப்பு தன்மை இல்லை.” என்றார்.

 

அர்ஜூன் பேசுகையில், “ஒரு படம் வெற்றி பெற்ற பிறகு அவர் அவர் வேலை பார்க்காமல், இப்படி ஒரு நன்றி சொல்லும் விழாவை நடத்தும் தயாரிப்பு நிறுவனத்திற்கு எனது நன்றி. ஒரு கதையை சொல்லும் போது நன்றாக இருக்கும், ஆனால் அதை படமாக்கும் போது எங்கயாவது ஏற்படும் சிறு தவறால் அந்த கதையே மாறிவிடும். ஆனால், இந்த கதையை என்னிடம் சொன்ன அருண், அதை படமாக கொடுத்த போது 200 சதவீதம் சிறப்பாக இயக்கியிருந்தார்.” என்றவரிடம், “உங்களது 151 வது படம் எந்த மாதிரியான படமாக இருக்கும்?” என்று கேட்டதற்கு, “எனது மகளை ஹீரோயினாக வைத்து சொல்லிவிடவா என்ற படத்தை இயக்குவதோடு, அதில் சிறு வேடத்திலும் நடிக்கிறேன். அது தான் எனது 151 வது படமாக இருக்கும். முற்றிலும் காதல் படமான அப்படத்தில் இதுவரை நான் நடிதிராத வேடம், பார்த்திராத அர்ஜூனை பார்ப்பீர்கள்.” என்றார்.