Oct 27, 2017 07:22 PM

பெப்ஸிக்கு எதிராக புதிய சங்கத்தை தொடங்கிய விஷால்!

பெப்ஸிக்கு எதிராக புதிய சங்கத்தை தொடங்கிய விஷால்!

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தில் (பெப்ஸி) உறுப்பினர்கள் அல்லாத நபர்களுடன் இணைந்து பணியாற்றுவோம், என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெப்ஸி அமைப்பு வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தியது. இதனால், ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்கள் உட்பட பல படங்களின் படப்பிடிப்பு பாதிகப்பட்டது.

 

பிறகு தயாரிப்பாளர் சங்கம், பெப்ஸி இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தையில் சுமூகமான முடிவு எட்டப்பட்டதை தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இருந்தாலும், பெப்ஸி அமைப்பில் உறுப்பினர்களாக இல்லாதவர்களுடன் பணிபுரிவது தயாரிப்பாளர்கள் உரிமை, அதில் எந்தவித மாற்றமும் இல்லை, என்று தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் அறிவித்தார்.

 

இந்த நிலையில், பெப்ஸி அமைப்புக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கமும், அவுட்டோர் யூனிட் அசோசியனும் இணைந்து புதியதாக யூனியன் ஒன்றை தொடங்கியுள்ளது.

 

‘டெக்னீசியன் யூனியன்’ என்ற தலைப்பில் தொடங்கப்பட்டுள்ள இந்த சங்கத்தில், பெப்ஸியில் இருந்து விலகிய பலரும் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளார்கள். அவர்களுக்கு அதற்கான புதிய உறுப்பினர் அடையாள அட்டையை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் விஷாலும், அவுட்டோர் யூனியன் அசோசியனின் தலைவர் முத்துசாமியும் இணைந்து வழங்கினார்கள்.

 

நிகழ்ச்சியில் பேசிய விஷால், “புதியதாக துவங்கப்பட்டுள்ள டெக்னீசியன் யூனியன் சிறப்பாக செயல்பட என்னுடைய வாழ்த்துக்கள்.உங்களுக்கு என்ன குறைகள், என்ன பிரச்சனைகள் இருந்தாலும் எங்களிடம் நீங்கள் தயங்காமல் கூறலாம். தயாரிப்பாளர் சங்கம் உங்களுடன் எப்போதும் இருக்கிறது.” என்றார்.