Aug 01, 2017 04:17 PM

வேலை நிறுத்தத்திற்கு பெப்ஸி காரணமல்ல - ஆர்.கே.செல்வமணி

வேலை நிறுத்தத்திற்கு பெப்ஸி காரணமல்ல - ஆர்.கே.செல்வமணி

இன்று முதல் பெப்ஸி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக வெளியான தகவலினால் தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பாதுகாப்போடு சில திரைப்படங்களின் படப்பிடிப்பு இன்று சென்னையில் நடைபெற்று வருவதாக தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளதோடு, சங்கத்தின் தலைவர் விஷாலின் துப்பறிவாளன் படத்தின் படப்பிடிப்பும் சிதம்பரத்தில் நடைபெற்று வருகிறது. அதற்கான வீடியோ ஆதாரமும் வெளியிடப்பட்டது.

 

இந்த நிலையில், இன்று ரஜினிகாந்தின் காலா உள்ளிட்ட எந்த படங்களின் படப்பிடிப்பும் நடைபெறவில்லை, என்று பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறியதோடு, இன்று நடைபெறும் வேலை நிறுத்தத்திற்கு பெப்ஸி தொழிலாளர்கள் காரணமல்ல, என்றும் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி, இன்று 10 ஆயிரம் பெப்ஸி ஊழியர்கள் தங்களை வேலையை இழந்துள்ளார்கள். இந்த வேலை நிறுத்தத்திற்கு பெப்ஸி காரணமல்ல, ஆனால் செய்திகளில் பெப்ஸி  தொழிலாளர்கள் வேலை நிறுத்தம், என்று போடப்படுவதால் எங்கள் மீது தவறான அபிப்ராயம் ஏற்படுகிறது. எங்கள் தரப்பில் எதாவது தவறு இருந்தால் அதை திருத்திக் கொள்கிறோம், பேச்சு வார்த்தை நடத்தி சுமூக தீர்வு காணலாம், என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையிலும், தயாரிப்பாளர் சங்கம் பெப்ஸி தொழிலாளர்களுடன் பணியாற்ற மாட்டோம், என்று அறிவித்தனர். அந்த கருத்தை திரும்ப பெற வேண்டும் என்று தன் நாங்கள் வலியுறுத்தினோம்.

 

இன்று படப்பிடிப்பு நடைபெறுவதாக தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது. ஆனால், எங்கள் ஊழியர்கள் எந்த படப்பிடிப்பிலும் கலந்துக்கொள்ளவில்லை. காலையில் கூட இயக்குநர் ஒருவர் போன் செய்து என்னிடம் முறையிட்ட போது, நாங்கள் சுமூக தீர்வு காண தயாராக இருக்கிறோம், என்று தான் கூறினார். நான் சொன்னால் 24 சங்கங்களும் கேட்கும் நிலை இருக்கின்றன. எதை நாங்கள் விட்டுக்கொடுக்க வேண்டுமோ அதை விட்டுக்கொடுக்கவும் தயாராக இருக்கிறோம். தாணு தலைவராக இருந்த போது சம்பளம் விவகாரம் பேசி முடிக்கப்பட்டு கையெழுத்தாகியுள்ளது. இப்போது அந்த சம்பளத்தை குறைக்க வேண்டும், என்று கூறிவதில் என்ன நியாயம் இருக்கிறது. 

 

பெப்ஸி உழியர்கள் தவிர்த்து வேறு சிலருடம் பணிபுரியும் உரிமை எங்களுக்கு இருக்கிறது என்று தயாரிப்பாளர் சங்கம் கூறுகிறார்கள். ஆனால், ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற ஆண், பிற பெண்களுடனும் நான் வாழுவேன், என்று கூறினால் அது சரியாக இருக்குமா? அது போலதான் இதுவோம். கடந்த 40 வருடங்களாக இரு தரப்பினருக்கும் இடையே ஒப்பந்தம் போடப்பட்டு அதன்படி பணியாற்றி வரும்போது திடீரென்று இப்படி கூறினால், தொழிலாளர்களின் நிலை என்னவாகும்.

 

தூங்குவதற்கு பேட்டா, சாப்பிடுவதற்கு பேட்டா, என்று தவறாக பேசுகிறார்கள். வேண்டுமென்றால் தூங்காமல் இருக்கும்படி தொழிலாளர்களிடம் வலியுறுத்துகிறோம். தற்போது சினிமா இருக்கும் சூழலில் இதுபோன்ற போக்கு சரியானதாக இருக்காது என்று நாங்கள் நன்றாகவே உணர்ந்துள்ளோம், அதற்காகவே சுமூக முடிவு ஏற்பட பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் தயாரிப்பாளர் தரப்பு செவி கொடுக்கவில்லை. இது குறித்து அரசிடம் முறையிடுவது குறித்தும் யோசித்து வருகிறோம்.”என்று தெரிவித்தார்.