Oct 31, 2017 02:45 PM

ஹீரோ அவதாரம் எடுத்த ஆஸ்கார் நாயகன்!

ஹீரோ அவதாரம் எடுத்த ஆஸ்கார் நாயகன்!

உலக பிரசித்தி பெற்ற சவுண்ட் டிசைனர்களில் ஒருவரான, ஆஸ்கார் விருது பெற்ற பிரபல சவுண்ட் டிசைனர் ரசூல் பூக்குட்டி ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார். அவர் ஹீரோவாக அறிமுகமாகும் ‘ஒரு கதை சொல்லட்டுமா’ படம் தமிழ், தெலுங்கி, மலையாளம் மற்றும் இந்தி என நான்கு மொழிகளில் உருவாகிறது.

 

பிரசாத் பிரபாகரன் இயக்கும் இப்படத்தை பாம் ஸ்டோன் மல்டிமீடியா நிறுவனம் சார்பில் ராஜிவ் பனகல் தயாரித்துள்ளார்.

 

கேரள மாநிலம், திருச்சூரில் ஆண்டு தோறும் நடைபெறும் உலக புகழ் பெற்ற பூரம் திருவிழாவின் அனைத்து ஒலிகளையும் பதிவு செய்ய விரும்பும் கனவோடு இருக்கும் ஒரு சவுண்ட் டிசைனரின் வாழ்க்கை தான் இப்படத்தின் கதை.

 

இப்படம் குறித்து இயக்குநர் பிரசாத் பிரபகாரன் கூறுகையில், “இந்த படம் இதுவரை யாரும் செய்யாத முயற்சி என உறுதியாக கூறுவேன். கேரளாவில் உள்ள திருச்சூரில் நடைபெறும் உலக புகழ் பெற்ற பூரம் திருவிழா பல லட்சம் கணக்கான மக்கள் கலந்து கொண்டு கொண்டாடும் விழாவாகும். ஏழு நாட்கள் நடைபெறும் திருவிழா இது. ஆயிரக்கணக்கான இசை கலைஞர்கள் நூற்றுக்கணக்கான இசை கருவிகளை வாசிக்கும் அந்த சூழல் மேஜிக்காக இருக்கும். இந்த எல்லா ஒலிகளையும் ரெக்கார்ட் செய்ய ஆசைப்படும் ஒரு சவுண்ட் டிசைனராக ரசூல் பூக்குட்டி நடித்துள்ளார். அவரது நிஜ வாழ்விலும் இது ஒரு நீண்ட நாள் ஆசை என்பது குறிப்பிடத்தக்கது.

 

இப்படத்திற்கு 'ஒரு கதை சொல்லட்டுமா' என தலைப்பிட்டுள்ளோம். ரசூல் அவர்கள் இந்த கதையை தேர்ந்தெடுத்து நடித்ததில் எனக்கு மிகவும்  பெருமை. முழு பூரம்  திருவிழாவையும் நேரில் சென்று படமாக்குவது என்பது எளிதான காரியம் அல்ல. எனது அணி பெரும் பாடுபட்டு இந்த அசுர காரியத்தை வெற்றிகரமாக முடித்தது. படப்பிடிப்புக்கு நான்கு  மாதங்கள் முன்பே தயார் பணிகளை தொடங்கிவிட்டோம். ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டை சேர்ந்த 80 க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்திற்காக  பூரம் திருவிழா ஒலிகளை ரெக்கார்ட் செய்வதில் பணிபுரிந்தனர். 

22 காமெராக்களை கொண்டு அந்த விழாவில் வாசித்து அசத்திய  300க்கும் மேற்பட்ட இசை கலைஞர்களை  படமாக்கியுள்ளோம். கண் பார்வை இல்லாதவர்களும் கதையை உணர்ந்து ரசிக்கும்படி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ராகுல் ராஜ் இசையில் வைரமுத்து அவர்களின் வரிகளில் இப்படம் உருவாகியுள்ளது. எங்களது அசுர உழைப்பை மக்கள் கண்டு ரசித்து பாராட்டும் நாளை எதிர்நோக்கியுள்ளேன்.” என்றார்.

 

இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலரை ஆண்டனி  எடிட் செய்துள்ளார். இப்பட பாடல்கள் ஏ.ஆர்.ரஹ்மானின் ஸ்டுடியோவில் ரெக்கார்ட் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தின் ஆடியோ உரிமையை 'சோனி மியூசிக்' நிறுவனம் பெற்றுள்ளது.