Nov 05, 2017 02:46 PM

அரசியல் கட்சிக்காக ரசிகர்களிடம் பணம் வசூலிக்க கமல்ஹாசன் முடிவு!

அரசியல் கட்சிக்காக ரசிகர்களிடம் பணம் வசூலிக்க கமல்ஹாசன் முடிவு!

விரைவில் புதிய அரசியல் கட்சி தொடங்க இருக்கும் நடிகர் கமல்ஹாசன், கட்சி நடத்துவதற்காக ரசிகர்கள் பணம் வசூலிக்க முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் புதிய செல்போன் செயலி ஒன்றையும் அவர் உருவாக்கியுள்ளார்.

 

சென்னை கேளம்பாக்கத்தில் இன்று ரசிகர்களை சந்தித்து பேசிய கமல்ஹாசன், தனது அரசியல் நிலைப்பாடு குறித்த சில தகவல்களை பகிர்ந்து கொண்டார். இன்றைய கூட்டத்தில் அறப்போர் இயக்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

 

ரசிகர்களிடம் பேசிய கமல்ஹாசன், “கடந்த 39 ஆண்டுகளாக ரசிகர்கள் கூட்டம் நடத்தி வருகிறேன். எம்ஜிஆர், கலைஞர் ஆகியோரும் இதுபோன்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியிருக்கிறார்கள். இப்போது அரசியல் சூழ்நிலை சரியில்லாததால், கட்சி தொடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறேன்.

 

அரசியல் கட்சி தொடங்க பணம் தேவைப்படும் என்கிறார்கள். ரசிகர்கள் நினைத்தால் அதை தந்து விடுவார்கள். அதற்காகத்தான் வரும் 7 ஆம் தேதி செல்போன் செயலி ஒன்றை அறிமுகப்படுத்த இருக்கிறேன். அதை செயல்படுத்தும் விதம் குறித்தும் அன்று விளக்கப்படும். 

 

கட்சி தொடங்க ஒரு 30 கோடி வேண்டும் என்றால் ரசிகர்கள் தர மாட்டார்களா என்ன? பணம் குறித்த பயம் எனக்கு இல்லை. அவர்கள் கொடுக்கும் ஒவ்வொரு காசுக்கும் நான் கணக்கு வைத்திருக்க வேண்டும். அதற்கும் அந்த செல்போன் செயலி பயன்படும். கட்சி தொடங்குவதன் முதல் பணிதான் இந்த செல்போன் செயலி.

 

நான் சினிமா ஷூட்டிங்கிற்காக பலமுறை சுவிட்சர்லாந்து சென்றிருக்கிறேன். ஆனால், சுவிஸ் வங்கிகளில் டெபாசிட் செய்தது கிடையாது. பணக்காரர்கள் முறையாக வரி செலுத்தினாலே நாடு வளர்ச்சி அடைந்து விடும். சுவிஸ் வங்கியில் நான் பணம் போட மாட்டேன். அங்கிருந்து பணத்தைக் கொண்டு வருவேன். இது ஆரம்பக் கூட்டம் தான். இதுபோல் இன்னும் 50 கூட்டங்கள் நடத்தப்படும். 

 

குழந்தை பிறக்க பத்து மாதங்கள் தேவைப்படும். கட்சிக்கு பெயர் வைப்பது ஒன்றும் பெரிய விஷயமில்லை. அரசியல் கட்சி அறிமுகம், அமைதியாகத்தான் செய்ய முடியும்.

 

என் பிறந்தநாளை ரசிகர்கள் யாரும் கொண்டாட வேண்டாம். இது கேக் வெட்டி கொண்டாடும் நேரம் அல்ல. கால்வாய் வெட்ட வேண்டிய நேரம்.” என்று தெரிவித்தார்.