Nov 10, 2017 07:18 AM

பெண் பிள்ளைகளுக்கு நடிகர் விஜய் சேதுபதி ரூ.50 லட்சம் நிதியுதவி!

பெண் பிள்ளைகளுக்கு நடிகர் விஜய் சேதுபதி ரூ.50 லட்சம் நிதியுதவி!

திண்டுக்கல்லில் உள்ள அணில் நிறுவனம், சேமியா தயாரிப்பில் முன்னணியில் உள்ளது. இது வரை டாப் அணில் மார்க்கெட்டிங் நிறுவனம் என்ற பெயரில் செயல்பட்டு வந்த நிறுவனம், தற்போது புதுப்பொலிவுடன் புதுச்சுவையுடன் பாரம்பரியம் மாறாமல் ‘அணில் ஃபுட்ஸ்’ என்று அறிமுகமாகிறது. 

 

நவம்பர் 9-ம் தேதி, திண்டுக்கல்லில் நடைபெற்ற நிகழ்வில், அணில் நிறுவனத்தின் புதிய சிறுதானிய சேமியா வகைகளை, அந்நிறுவனத்தின் விளம்பர தூதுவரான நடிகர் விஜய் சேதுபதி அறிமுகம் செய்து வைத்தார்.

 

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, ”நான் விளம்பர படங்களில் அதிகமாக நடிக்காமல் இருந்தேன். சில விளம்பரங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன். இப்போது, அணில்  உணவு வகைகளின்   (Anil Food   Products ) விளம்பரத்தில் நடித்துள்ளேன்.

 

இந்த விளம்பரப் படத்தில் நடித்ததற்காக எனக்கு கிடைத்துள்ள தொகையில், ஒரு பகுதியை கல்வி உதவித் தொகையாக  வழங்க முடிவு செய்துள்ளேன். கல்வியில் பின்தங்கிய மாவட்டமாக அரியலூர் இருக்கிறது. இந்த மாவட்டத்தில் மொத்தமுள்ள 774 அங்கன்வாடிகளுக்கு தலா 5000 ரூபாய் வீதம் முப்பத்தெட்டு லட்சத்து எழுபது ஆயிரம் ( 38,70,000 ). ரூபாயும்  மேலும் தமிழ்நாட்டில் உள்ள 10 அரசு பார்வையற்றோர் பள்ளிகளுக்கு தலா ஐம்பதாயிரம் வீதம் ஐந்து லட்சம் ( 5,00,000 ) ரூபாயும், மேலும் தமிழ் நாட்டில் உள்ள 11  அரசு செவித்திறன் குறைந்தோர் பள்ளிகளுக்கு தலா ரூபாய் ஐம்பதாயிரம் வீதம் ஐந்து லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயும் (5,50,000) மொத்தம் நாற்பது ஒன்பது லட்சத்து இருபதாயிரம் ரூபாய்  (49,20,000 ) தமிழக அரசிடம்  வழங்கமுடிவு செய்துள்ளேன்.

 

கல்வியில் பின்தங்கிய மாவட்டமான அரியலூரில் இருந்து அதிக மதிப்பெண் எடுத்து டாக்டராக ஆசைப்பட்டு, அது முடியாமல் உயிர்நீத்த அனிதாவின் நினைவாக இந்தத் தொகையை வழங்குகிறேன்” என்றார். 

 

”துரித உணவுகள் பிரபலம் அடைந்துள்ளதால், அதில் உள்ள ஈர்க்கும் வேதியியல் சுவைக்கு மயங்கும் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் உடல் நலம் பாதிக்கப்படுகிறது. இதனால், மக்களின் நலனுக்காக, குழந்தைகளுக்கும் பிடிக்கும் சுவையில், ஆரோக்கியமான முறையில், தரமான, உணவுகளைத் தயாரிக்க வேண்டும் என்று திட்டமிட்டு இந்தப் புதிய சிறுதானிய சேமியா வகைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறோம்.” என அணில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான கமலஹாசன் தெரிவித்தார்.

 

அணில் நிறுவனத்தின் செயல் இயக்குனரான, சுகுமாரன் பேசுகையில், “எளிதாகச் சமைக்கக் கூடிய வகையிலும், அதே சமயம் காலை உணவு ஆரோக்கியம் நிறைந்ததாக இருக்க வேண்டும் என்றும் இந்தச் சேமியா வகைகளைத் தயாரித்துள்ளோம். இதில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் எந்த வேதிக்கலப்பும் இல்லாத தரமான சேமியாவாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை உண்போரின் உடல் நலமும் ஆரோக்கியமாகும்.” என அறிவித்தார்.

 

கம்பு, வரகு, தினை, சோளம்,கோதுமை ஆகிய சிறுதானியங்களை மூலப்பொருளாகக் கொண்டு இந்தச் சேமியா வகைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் புதுச்சுவையுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. தரம், ஆரோக்கியம், சுவை ஆகியவற்றை மையமாக வைத்து மக்கள் நலனுக்காக இந்தச் சிறுதானிய சேமியாக்களை அணில் நிறுவனம் வெளியிட்டுள்ளது.