Nov 25, 2017 11:20 AM

சினிமாவில் அறிமுகமாகும் எம்.எஸ்.எஸ்-ன் இசை வாரிசு!

சினிமாவில் அறிமுகமாகும் எம்.எஸ்.எஸ்-ன் இசை வாரிசு!

டில்லி மற்றும் தாதா சாஹிப்  குறும்பட விழாவில் வென்ற "ஈஷா" எனும் குறும்படம் தற்போது குறள் 146 என்ற பெயரில் திரைப்படமாகத் தயாராகி வருகிறது. முதல் கட்ட பணியாகப் பாடல் பதிவுடன் ஆரம்பமானது. உமா ஷங்கர் இயக்கும் இத்திரைப்படத்தில் குரு கல்யாண் இசையில் 5 பாடல்கள் இடம்பெறவுள்ளது. முதல் பாடல் பதிவு இன்று (Nov 24 2017) நடைபெற்றது. இதற்கான பாடல் வரிகள் சித்தர் பட்டினத்தார் அவரது வரிகளிலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளது. இப்பாடலைப் பாரத ரத்னா விருது பெற்ற இசை மேதை எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்களின் இசைவாரிசான செல்வி. எஸ்.ஐஸ்வர்யா பாடினார் அவருடன் இணைந்து இசை அமைப்பாளர் குரு கல்யாண் பாடினார். 

 

எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்களின் இசை வாரிசான செல்வி. எஸ்.ஐஸ்வர்யா திரைத்துறையில் பாடும் முதல் பாடல் இதுவாகும். "அன்னை எத்தனை எத்தனையோ" என்ற இந்தப் பாடல் ஸ்ட்ரிங் வாத்தியங்களைப் பிரதானமாக கொண்டு கையாளப்பட்டுள்ளது. சித்தரின் பாடல் வரிகளுக்கேற்ப இசையமைக்கப்பட்டுள்ளது. ஈஷா குறும்படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் கிறிஸ்டோபர் ஜோசப் இத்திரைப்படத்திலும் ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.

 

கலை இயக்குநர் உமா ஷங்கர் இத்திரைப்படத்தின் மூலம் இயக்குநர் ஆகிறார். கடந்த 17 வருடங்களாகத் திரைத்துறையில் உமா ஷங்கர் பல்வேறு துறைகளில் அனுபவம் பெற்றவர். இவருடைய முதல் குறும்படமான ஈஷா பல்வேறு குறும்பட விழாக்களில் வெற்றி பெற்று வருகிறது. (டில்லி ஷார்ட் பிலிம், தாதா சாஹிப் பால்கே பெஸ்டிவல், கேன்ஸ் பெஸ்டிவல்)  

 

மாத்தியோசி திரைப்படம் மூலம் அறிமுகமானார் இசை அமைப்பாளர் குரு கல்யாண். கடந்த சில மாதங்களாகத் தனிப்பாடல்கள் அமைத்து இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார். ஈஷா எனும் குறும்படம் மூலம் உமா ஷங்கருடன் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றார். அறியக் கதைக்களத்தை கொண்ட குறள்-146 எனும் இத்திரைப்படம் பல புதிய இசை முயற்சிகளைக் கையாள அறிய வாய்ப்பாக அமைந்துள்ளது என்றார்.