Nov 27, 2017 06:58 AM

கமல், விஜய், சீமான் அரசியலுக்கு யார் சரியானவர்கள்? - அமீரின் பரபரப்பு பதில்!

கமல், விஜய், சீமான் அரசியலுக்கு யார் சரியானவர்கள்? - அமீரின் பரபரப்பு பதில்!

சன் நியூஸ் சேனலில் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் இயக்குநர் அமீர் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் இணை தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை விவகாரம், தமிழக அரசியல் சூழல் உள்ளிட்டவை குறித்து கேட்கப்பட்டது. 

 

அப்போது அவர் கூறுகையில், ”பண விவகாரத்தில் அன்புச் செழியன் கறார் பேர்வழி என கேள்விப்பட்டுள்ளேன். அதனால்தான் நான் அவருடன் வியாபாரம் வைத்துக் கொள்ளவில்லை. அன்புச்செழியனுக்கு அரசியல் பின்புலம் உள்ளது என்று எனக்கு தெரியும். ஆனால் யார் இருக்கிறார்கள் என்பதெல்லாம் தெரியாது.

 

அசோக் குமார் தற்கொலை விவகாரத்தில் இதுவரை காவல் துறை சரியாகதான் செயல்படுகிறதாக நான் கருதுகிறேன். ஆனால் தலைமறைவாக உள்ள அன்புச்செழியன் பிடிப்படாமல் இருக்க அரசியல்வாதி யாரோ பின்புலமாக உள்ளார். அவர் யாரென்றுதான் தெரியவில்லை.

 

மக்களுக்கு நல்லது செய்வதற்காக யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். கமல் சரியான தலைமை அல்ல. தமிழ்நாட்டிற்கு வேறு ஒரு தலைமை தேவைப்படுகிறது. இதற்கு தகுதியான நபராக கமல் தன்னை வளர்த்து கொள்ள வேண்டும். 

 

இன்று கமல் தமிழ்நாட்டுக்கு சரியான தலைமை அல்ல. சமீபகாலங்களாக ஆளும் அதிமுகவை விமர்சனம் செய்வதில்தான் முனைப்பு காட்டினாரே தவிர, மக்கள் பிரச்சினைகள் எதையும் அவர் முன்னெடுக்கவில்லை. டுவிட்டரில் கருத்தை போட்டால் அது மக்களை சந்திப்பது என்றாகிவிடுமா. நாட்டில் உள்ள 8 கோடி பேரும் டுவிட்டரில் இருக்காங்களா. கமல்ஹாசன் மக்கள் பிரச்சினைகளை முழுமையாக உள்வாங்கி சென்றால்தான் தலைமை பண்பை ஏற்பதற்கு சரியாக இருக்கும். இது எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்பது களத்தில் இறங்கினால்தான் தெரியும். 

 

விஜய்யின் வயதை கணக்கு செய்தாலும், திரைப்படங்களின் வெற்றிகளை கணக்கு செய்தாலும் இவர்கள் வந்தவுடன் முதல்வர் சீட்டில் உட்காருவதற்கான வாய்ப்பு குறைவு. எனக்கு தனிக்கட்சி தொடங்கும் எண்ணமெல்லாம் கிடையாது. அந்த அளவுக்கு பெரிய ஆளாக என்னை நான் கற்பனை செய்து பார்த்தது கிடையாது. சீமானின் கொள்கைகளும், சிந்தனைகளும் மிகவும் தெளிவாக உள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.