Dec 09, 2017 06:40 AM

பல கோடி கடன் - சொத்துக்களை விற்க தொடங்கிய விஷால்!

பல கோடி கடன் - சொத்துக்களை விற்க தொடங்கிய விஷால்!

நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என்று சினிமாத் துறையச் சேர்ந்த அமைப்புகளில் நிர்வாகியாகி, பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் விஷால், தற்போது நேரடி அரசியலிலும் இறங்கிவிட்டார். ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில், விஷால் தரப்பு சற்று தடுமாறியிருந்தாலும், வரப்போகும் தமிழக சட்டமன்ற தேர்தலில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தும் என்பது உறுதி.

 

இந்த நிலயில், விஷால் பல கோடி கடனாளியாகிவிட்டதால், தனது சொத்துகளை விற்க தொடங்கிவிட்டதாக இயக்குநர் முத்தையா கூறியுள்ளார்.

 

விஷாலை வைத்து ‘மருது’ என்ற படத்தை இயக்கியுள்ள முத்தையாவிடம், விஷால் அரசியலுக்கு வருவது பற்றி கேட்டதற்கு, “விஷால் சார், கோபத்தை வெளிப்படையாகக் காட்டிவிடுவார். அவர் எப்போதும் நல்ல மனிதர். தன்னைச் சுற்றி இருப்பவர்கள் கஷ்டப்படக் கூடாது என்று நினைப்பார். சினிமாவில்தான் நடிப்பாரே தவிர நேரில் நடிக்கவே மாட்டார். நிறைய உதவிகள் செய்யக் கூடியவர். ஒரு ஹீரோவுக்கு ஸ்க்ரீனில் எவ்வளவு கோபம் இருக்குமோ அதே அளவுக்கு அவருக்கு நேரிலும்  கோபம் இருக்கும். எத்தனையோ ஹீரோக்கள் நன்றாகச் சம்பாதித்துவிட்டு லைஃப்பில் செட்டில் ஆகிக்கொண்டிருக்கும்போது இவருக்கு நாற்பது கோடி ரூபாய் கடன்தான் இருக்கிறது. நேற்று வந்த ஹீரோக்களே கோடிகளில் சம்பளம் வாங்கிக்கொண்டு, அப்பார்ட்மென்ட்ஸ் கட்டி செட்டிலாகிக்கொண்டிருக்கும்போது இவர் இருப்பதை எல்லாம் விற்றுக்கொண்டிருக்கிறார். 

 

விஷாலுக்குப் பணம் கொடுத்து அவரை தங்கள் படங்களில் நடிக்கவைக்க பல தயாரிப்பாளர்கள் ரெடியாக இருக்கிறார்கள். அவர் நடித்துவிட்டு பேங்க் பேலன்ஸை ஏற்றிக்கொண்டு போய்க்கொண்டே இருக்கலாம். ஆனால் அவர் சினிமாவில் நல்ல விஷயங்களைச் செய்யவேண்டும் என்று நினைக்கிறார். இவரை மாதிரியான ஆட்களை வரவேற்கவேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.