Dec 16, 2017 06:17 AM

இயக்குநரிடம் அடம்பிடிக்கும் கீர்த்தி சுரேஷ் - காரணம் அனுஷ்கா!

இயக்குநரிடம் அடம்பிடிக்கும் கீர்த்தி சுரேஷ் - காரணம் அனுஷ்கா!

பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு ‘மகாநதி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சாவித்ரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இப்படத்தை நாக் அஸ்வின் இயக்குகிறார்.

 

இந்த நிலையில், சாவித்ரி சற்று குண்டான தோற்றம் கொண்டவர் என்பதால், கீர்த்தி சுரேஷையும் உடல் எடையை கூட்டி, குண்டான தோற்றத்துக்கு மாறும்படி இயக்குநர் கேட்டுள்ளார். ஆனால், கீர்த்தி சுரேஷோ மறுத்துவிட்டாராம். இயக்குநர் எவ்வளவோ கேட்டாலும், உடல் எடையை மட்டும் குறைக்க மாட்டேன், என்று கீர்த்தி சுரேஷ் அடம்பிடிக்கிறாராம். இதனால், கிராபிக்ஸ் உதவியோடு கீர்த்தி சுரேஷை குண்டாக காட்டும் முடிவுக்கு இயக்குநர் நாக் அஸ்வின் வந்துவிட்டாராம்.

 

கீர்த்தி சுரேஷ், இப்படி அடம்பிடிப்பதற்கு காரணம் அனுஷ்கா தான் என்று கூறப்படுகிறது. கடந்த 2 வருடங்களுக்கு முன்பு அனுஷ்காவுக்கும் இதே போன்ற பிரச்சினை ஏற்பட்டது. தமிழில், ‘இஞ்சி இடுப்பழகி’ என்ற பெயரிலும், தெலுங்கில், ‘சைஸ் ஜீரோ’ என்ற பெயரிலும் தயாரான படத்தில், அனுஷ்காவுக்கு குண்டு பெண் வேடம். அதில் நடிப்பதற்காக அனுஷ்கா தனது உடல் எடையை கூட்டி, குண்டு பெண்ணாக மாறினார்.

 

அந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும், அனுஷ்கா மீண்டும் ஒல்லியாக பழைய தோற்றத்துக்கு மாற முயன்றார். முடியவில்லை. இதற்காக அவர் பட்டினி கிடந்தார். கடுமையாக உடற்பயிற்சி செய்தார். என்றாலும் அவரால் பழைய ஒல்லி தோற்றத்துக்கு மாற முடியவில்லை. 

 

தற்போது தொடர் உடற்பயிற்சியால் முதுகுவலியாலும் அனுஷ்கா கஷ்ட்டப்பட்டு வருபவர், சிகிச்சைக்காக கேரளாவுக்கு சென்றுள்ளாராம்.

 

அனுஷ்காவின் இத்தகைய நிலையால் தான், கீர்த்தி சுரேஷ் உடல் எடையை கூட்ட பயப்படுகிறாராம்.