Aug 08, 2017 07:16 AM

ஒத்த பாட்டில் மொத்த உலக தமிழர்களை கவர்ந்த பாடகர் பவன்!

ஒத்த பாட்டில் மொத்த உலக தமிழர்களை கவர்ந்த பாடகர் பவன்!

கல்யாண வீடாகட்டும், காது குத்து வீடாகட்டும் தமிழகத்தில் நடக்கும் நிகழ்ச்சிகள் பலவற்றில் இசை நிகழ்ச்சிகளில் பாடப்படும் பாடலாகட்டும், ஒலிக்கப்படும் பாடலாகட்டும் “உன் ரெட்ட சட கூப்பிடுது முத்தம்மா...” என்ற பாடல் இல்லாமல் இல்லை என்றாகிவிட்டது. அந்த அளவுக்கு தமிழகத்தின் பட்டிதொட்டி மட்டும் இன்றி, ஆஸ்திரேலியா, கனடா போன்ற வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் பேவரைட் பாடலாகியுள்ள இந்த பாடல் சமீபத்தில் வெளியான ‘பாக்கணும் போல இருக்கு” படத்தில் இடம்பெற்றுள்ள பாடலாகும்.

 

படம் வெளியாவதற்கு முன்பாகவே, இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் மக்களிடையே வரவேற்பு பெற்று தமிழகம் முழுவதும் ஒலித்துக்கொண்டிருக்க, “இது எந்த படத்தின் பாடல்?” என்று கேட்ட ரசிகர்கள், படம் வெளியான பிறகு இந்த பாடலை பாடியவர் யார்? என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்படி ஒரே ஒரு பாடல் மூலம் உலகத்தமிழர்களின் தேடலுக்கு ஆளாகியுள்ள அந்த பாடகர் நம்ம சென்னையில் இருக்கும் பவன் என்பவர் தான்.

 

கர்நாடக இசை மற்றும் வெஸ்டன் இசையை முறைப்படி கற்றுத்தேர்ந்துள்ள பவன், இசைத் துறையில் பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவர். இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், வித்தியாசாகர், ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட பல முன்னணி இசையமைப்பாளர்களுடன், பல வருடங்களாக கோரஸ் பாடகராக பணியாற்றியவர் மேடை இசை நிகழ்ச்சிகளிலும் பல ஆண்டுகள் பாடி வருகிறார்.

 

கர்ணன் திரைப்படத்தில் இடம்பெறும் “உள்ளத்தில் நல்ல உள்ளம்” என்ற பாடல் முழுவதையும், அப்படியே பாடும் திறன் படைத்த இவர், எம்.எஸ்.வி அவர்களிடமே பாராட்டு பெற்றிருக்கிறார். 

 

இப்படி மேடை இசை நிகழ்ச்சிகள் கோரஸ் என்று இருந்த பவன் கிடைத்த வாய்ப்புகளில் தனது திறமையை நிரூபிக்க தவறியதில்லை. ‘கத்துக்குட்டி’, போட்டா போட்டி’, ‘பாண்டியநாடு’ என்று இவர் பாட்டு பாடிய படங்கள் அனைத்தும் ஹிட் என்பதால், லக்கி பாடகரான இவர் பாடிய, “உன் ரெட்ட சட கூப்பிடுது முத்தம்மா..” பாடல் மூலம் பல வாய்ப்புகல் குவிந்துக்கொண்டிருக்கிறது.

 

எப்.சி.எஸ் கிரியேசன்ஸ் சார்பில் துவார் ஜி.சந்திரசேகர் தயாரிப்பில், அருள்தேவ் இசையமைப்பில், எஸ்.பி.ராஜ்குமார் வரிகளில் உருவான இப்பாடல் பெற்ற மிகப்பெரிய வெற்றியால், இக்குழுவினர் தொடர்ந்து பாடகர் பவனுக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார்கள். இசையமைப்பாளர் அருள்தேவ், தனது அடுத்த படத்திலும், தயாரிப்பாளர் துவார் ஜி.சந்திரசேகர் தயாரிக்கும் படங்களிலு பவன் தொடர்ந்து பாடப் போகிறார்.

 

இப்பாடல் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ள பாடகர் பவன், குத்துபாடல் மட்டுமல்ல மெல்லிசை பாடல் பாடுவதிலும் வல்லவர். இசையை முறைப்படி கற்றதால், இசையமைப்பாளர்கள் பாடல் கொடுத்தால், அதை எப்படி மெருகேற்ற வேண்டும் என்பதை அறிந்து நோட்ஸ் எழுதி நான் பாடுவதால், இசையமைப்பாளர்கள் உருவாக்கிய அந்த பாடலின் தனித்துவம் மாறாமல் இருப்பதால் தன்னால் குத்துப்பாட்டு, மெல்லிசை பாட்டு மட்டுமல்ல வெஸ்டன் பாடல்களையும் அதன் பிளேவர் மாறாமல் பாட முடியும், என்று அடக்கமாக கூறும் பவன், தற்போது ‘நான் அவளை சந்தித்தபோது’, ‘இதெல்லாம்’, ‘வெளியில தல காட்ட முடியல’, ‘துப்பார்க்கு துப்பாய’ உள்ளிட்ட பல படங்களில் பாடியிருக்கிறார்.