Aug 09, 2017 08:32 AM

பேமிலி எண்டர்டெய்னராக உருவாகியுள்ள ‘கதாநாயகன்’

பேமிலி எண்டர்டெய்னராக உருவாகியுள்ள ‘கதாநாயகன்’

‘வெண்ணிலா கபடி குழு’ என்ற பிரம்மாண்ட வெற்றி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான விஷ்னு விஷால், ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ என்ற தனது மற்றொரு பிரம்மாண்ட வெற்றி படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் உருவெடுத்தவர், தொடர்ந்து பல படங்களில் நடித்துக்கொண்டே, தயாரிப்பையும் கவனித்து வருகிறார்.

 

அந்த வரிசையில் விஷ்னு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கதாநாயன்’. இதில் விஷ்னு விஷாலுக்கு ஜோடியாக கேத்ரின் தெரசா நடிக்கிறார். இவர்களுடன் சூரி, சரண்யா பொன்வண்ணன், ஆனந்த்ராஜ், அருள்தாஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

 

இப்படத்தை இயக்குபவர் முருகானந்தம். இயக்குநராக இவர் இப்படத்தின் மூலம் அறிமுகமானாலும், நடிகராக ரசிகர்களிடம் பிரபலமானவர், “இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” படத்தில் “பிரண்டு லவ் பெயிலியர் ஆப் அடிச்சா சரியாயிடும்” என்ற வசனத்தை ”இன்னொரு முறை சொல்லுங்க...” என்று கேட்டு காமெடி செய்தவர், ’காஸ்மோரா’, ‘மரகத நாணயம்’ என்று பல படங்களில் காமெடியில் கலக்கிக்கொண்டிருக்கிறார். மற்றவர்கள் படங்களிலேயே காமெடியில் அமர்க்களப்படுத்தும் முருகானந்தம், அவரது படத்தை சும்மா விடுவாரா” பட்டையை கிளப்பியிருக்கிறாராம்.

 

இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய முருகானந்தம், “விஷ்னு விஷால் ஒரு நல்ல நடிகராக மட்டுமில்லாமால், ஒரு சிறந்த தயாரிப்பாளராகவும் இருக்கிறார். படம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. எங்கள் குழு எப்போதும் நகைச்சுவையாக மகிழ்ச்சியுடன் பணியாற்றினோம். எனக்கு உறுதுணையாக இருந்த அணைவருக்கும் நன்றி. பத்திரிக்கை நண்பர்களும் இப்படத்திற்கு நல்லாதரவு தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்", என்றார்.

 

விஷ்னு விஷால் பேசுகையில், “வெண்ணிலா கபடி குழு படத்திற்கான வாய்ப்பு கிடைத்தது. முதல் படம் நல்ல பெயரை பெற்று தந்த போதிலும் அடுத்தடுத்த படங்கள் சற்று சறுக்கல்களை தந்தன. எனினும் முயற்சியை கைவிட வில்லை. கடைசியாக என்னுடைய தயாரிப்பில் வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்திற்கு பத்திரிக்கையாளர்கள் தந்த ஆதரவுக்கு நன்றி. தற்போது அதே மாதிரியான ஒரு தரமான படமாக கதாநாயகன் படம் வந்துள்ளது. இந்த படத்திற்கு தங்கள் நல்லாதரவினை தருமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.

 

மூத்த நடிகையான சரண்யா பொன்வண்ணன் பேசுகையில், "விஷ்னுவிடம் குழந்தை முகம் உள்ளது. மேலும் எந்த ஒரு விஷயத்தையும் கற்றுக் கொள்ள வேண்டிய ஆர்வமும், முயற்சியும் உள்ளது. இது அவரை கண்டிப்பாக அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லும். படத்தின் இயக்குனர் முருகானந்தம் மிகவும் திறமையானவர். ஒரு நடிகர் மக்களிடத்தில் எந்த மாதிரியான இடத்தை பெற்றிருக்கிறார் என்பதை உணர்ந்து அதற்கேற்ப வேலை வாங்குகிறார். இந்தப்படம் கண்டிப்பாக ஒரு பேமிலி எண்டர்டெய்னராக இருக்கும்."என்று கூறினார். 

 

நடிகர் ஆனந்த் ராஜ், "இப்படத்தில் முதன் முறையாக ஷேய்க் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். படத்தின் இயக்குனர் என்னுடன் மரகத நாணயம் படத்தில் நடித்திருந்தார். இப்போது அவர் படத்தில் நான் நடித்திருக்கிறேன். படத்தில் எனது கதாபாத்திரத்தை நன்றாக வடிவமைத்துள்ளார். கதாநாயகன் படம் வெற்றிபெற என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்," என்று கூறினார்.

 

ஷான் ரோல்டனின் இசையில் ஹிட்டான பாடல்களுடனும், ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் ஒளிப்பதிவாளரான லெக்ஷ்மனின் ஒளிப்பதிவு பிரம்மாண்ட காட்சிகளுடனும் உருவாகியுள்ள ‘கதாநாயகன்’ விரைவில் வெளியாக உள்ளது.