Aug 10, 2017 06:32 AM

முன்னணி ஹீரோயின்களுடன் கைகோர்த்த பாடலாசிரியர் உமாதேவி

முன்னணி ஹீரோயின்களுடன் கைகோர்த்த பாடலாசிரியர் உமாதேவி

தமிழ் திரைப்பாடல் உலகில் மிக முக்கியமான ஆளுமையாக, திறமையான பாடலாசிரியராக தனிப்பாதையில் பயணிப்பவர், கவிஞர் உமாதேவி.

 

‘மெட்ராஸ்’ திரைப்படத்தில் உமாதேவி எழுதிய ‘நான், நீ, நாம் வாழவே’ பாடல் உமாதேவிக்கு சிறப்பான அறிமுகத்தை தந்தது. அதன்பின், ‘கபாலி’ திரைப்படத்தில் உமாதேவி எழுதிய ‘மாயநதி’ மற்றும் ‘வீரத்துரந்தரா’ பாடல்கள் உமாதேவியின் எழுத்தாற்றலுக்கு எடுத்துக்காட்டுகளாய் அமைந்தன.

 

இப்போது, தமிழ் சினிமாவின் மிக முக்கியமான கதாநாயகிகளான, த்ரிஷா, ஜோதிகா, நயன்தாரா மூவருடன் கைகோர்த்திருக்கிறார், உமாதேவி. த்ரிஷா, விஜயசேதுபதி நடிக்கும் ‘96’, ஜோதிகா நடிக்கும் ‘மகளிர் மட்டும், நயன்தாரா நடிக்கும் ‘அறம்’ ஆகிய 3 படங்களுக்கும் ஒரே நேரத்தில் பாடல்கள் எழுதியிருக்கிறார், உமாதேவி.

 

'மகளிர் மட்டும்' படத்தில் ஜிப்ரான் இசையில் உமாதேவி எழுதியுள்ள, ‘அடி வாடி திமிரா…’ பாடல் லிரிக் வீடியோ ஒரு கோடி பார்வையாளர்களுக்கு மேல் ரசிக்கப்பட்டு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

 

ஜிப்ரான் இசையில் 'அறம்' மற்றும் கோவிந்த் மேனன் இசையில் '96' படப்பாடல்களும் பெரிய வரவேற்பைப் பெறும் என்கிறார் உமாதேவி.

 

“அறம்” படத்தில் இடம்பெற்றுள்ள, “புது வரலாறே புற நானூறே” மற்றும் “தோரணம் ஆயிரம்” பாடல்களும் வெளியானதில் இருந்து அதன் வரிகளுக்காக தொடர்ந்து பாராட்டுகளைப் பெற்றுக்கொண்டிக்கிறார், உமாதேவி.

 

வழக்கமான பாடல்கள், சூழல்கள், அதற்கு பழக்கமான வரிகள் என்பதைத்தாண்டி வெடிக்கின்றன உமாதேவியின் வரிகளும் வார்த்தைகளும், என்பது “அறம்” படப்பாடல்களை கேட்டவர்களின் கருத்து. 

 

த்ரிஷா, ஜோதிகா, நயன்தாரா 3 பேரின் படங்களிலும் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் பாடல்கள் எழுதியதில் மகிழ்ச்சி என்கிற உமாதேவி, வழக்கமான பாடல் வரிகளில் இருந்து என் வரிகள் மாறுபட்டிருப்பதை கவனித்து பலரும் பாராட்டும்போது உண்மையாகவே மகிழ்கிறேன் என்கிறார்.

 

பரபரப்பாக பல படங்களில் பாடல்கள் எழுதிக்கொண்டிருக்கும் உமாதேவி,   மீண்டும் தன் ஆஸ்தான இயக்குநர் பா.இரஞ்சித் மற்றும் ஆஸ்தான இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கூட்டணியுடன் ஹாட்ரிக் ஹிட் அடிக்க இருக்கிறார். மெட்ராஸ், கபாலி, படங்களைத் தொடர்ந்து  ‘காலா படத்திற்கு பாடல்கள் எழுதிக்கொண்டிருக்கிறார் உமாதேவி.