Aug 10, 2017 10:35 AM

’பாகுபலி’ படத்திற்கு பிறகு அனுஷ்கா நடிக்கும் ‘பிரமாண்ட நாயகன்’

’பாகுபலி’ படத்திற்கு பிறகு அனுஷ்கா நடிக்கும் ‘பிரமாண்ட நாயகன்’

பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டு நாகார்ஜுன்,  அனுஷ்கா,  பிரக்யாஜெய்ஸ்வால், ஜெகபதிபாபு, சாய் குமார், சம்பத், பிரம்மானந்தம் இவர்களின் நடிப்பில் வெளிவர இருக்கிற தமிழ்ப்படம்  அகிலாண்டகோடி 'பிரமாண்ட நாயகன்.' ராமா என்ற வேங்கடசபெருமாளின் பக்தனின் உண்மைச் சம்பவத்தை  மையமாகக்கொண்டது.

 

ஜனரஞ்சகமாக இன்றைய நவீன காலத்திற்கேற்ப மிகச்சிறந்த தொழில் நுட்பத்தைப்  பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள படம் எனலாம்.    

 

இப்படத்தை  இயக்கியுள்ளவர் சுமார் 60 படங்களுக்கும் மேல் இயக்கியுள்ளவரும்  'பாகுபலி' புகழ் எஸ்.எஸ். ராஜமெளலியின் குருவுமான கே.ராகவேந்திர ராவ்.

 

பெருமாளின் பக்தையான ஆண்டாளின் கதாபாத்திரத்தை மையமாகவைத்து அனுஷ்கா கதாபாத்திரத்தை உருவாக்கி கதாநாயகியாக நடிக்கவைத்துள்ளனர்.

 

மகாபாரத கிருஷ்ணராக நடித்து புகழ்பெற்ற சௌரப்ஜெயின் வேங்கடேச பெருமாள் வேடம் ஏற்று சிறப்பாக நடித்துள்ளார்.

 

'பாகுபலி'க்கு இசையமைத்து புகழ்பெற்ற கீரவாணி இப்படத்தின் கதையின் தேவைக்கேற்ப 12 பாடல்களை சிறப்பாக இசையமைத்துள்ளார். 

 

பகவானுக்கும் பக்தனுக்கும் உள்ள உறவு, திருமலை உருவான விதம், ஆனந்த நிலையம் என பெயர் வரக்காரணம்,  வேங்கடம் என்ற சொல்லுக்கு பொருள் விளக்கம்,  ராமா என்பவர்   ஹாத்திராம் பாபாவாக மாறியது எப்படி, பாலாஜி என்று பெயர் வரக்காரணம்,  திருமலையில் முதலில் யாரை வணங்குவது என பக்தர்கள் மனதில் எழும்  பல சந்தேக வினாக்களுக்கு ஏற்ற  விளக்கங்களை இப்படத்தில் தெளிவான படக்காட்சிகளாக  அமைத்து தெளிவு படுத்தியுள்ளனர்.

 

பக்திக் கருத்துகளைக் கூறினாலும் இது ஒரு முழு நீள சமூகப்படம். விறுவிறுப்பான பிரமாண்ட காட்சிகளுக்குப் பஞ்சமில்லாதபடி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

 

வசனம் பாடல்களை டி.எஸ்.பாலகன் எழுத ஜெ.கே.பாரவி கதை எழுத கோபால்ரெட்டி ஒளிப்பதிவு செய்துள்ளார். 

 

பிரபல பின்னணிப் பாடகர்கள்  உன்னி கிருஷ்ணன் , எஸ்.பி.பி. சரண் , டாக்டர் சீர்காழி ஜி. சிவசிதம்பரம்  , வி.வி. பிரசன்னா , ஜானகி ஐயர் , முகேஷ் , ஹேமாம்பிகா . பிரியா , ராஜேஷ் , கவிதா கோபி எனப் பலரும் பாடல்களைப் பாடியுள்ளனர்.

 

பாகுபலிக்குப் பிறகு அனுஷ்காவுக்குப் பெயரும் புகழும் சேர்க்கும்படி அவரது பாத்திரம் அடைந்து இருப்பது படத்தின் பெருமைகளில் ஒன்று.

 

தமிழகத் திரைகளில் இந்தப் ' பிரமாண்ட நாயகன் '  காட்சி அமைப்பின் விஸ்வரூப தரிசனம் தரும்  விதத்தில்

வெளியாகவுள்ளது.

 

பெருமாளுக்கு உகந்த  புரட்டாசி மாதத்தில் உலகமெங்கும் திரையிட இப்படத்தை  ஜோஷிகா பிலிம்ஸ் சார்பில் தயாரித்திருக்கும்  தயாரிப்பாளர்கள்   எஸ்.துரைமுருகனும், பி.நாகராஜனும்  திட்டமிட்டுள்ளனர்.