Aug 10, 2017 11:55 AM

யானையின் தாகத்தை தீர்த்த ‘குரு உச்சத்துல இருக்காரு’ படக்குழுவினர்

யானையின் தாகத்தை தீர்த்த ‘குரு உச்சத்துல இருக்காரு’ படக்குழுவினர்

தான் காதலிக்கும் பெண்ணின் தந்தை ஊர் பஞ்சாயத்து தலைவர் என்பதற்காக, தன் காதலியை பார்க்க தோணும்போதெல்லாம் ஒரு சின்ன விஷயத்தை பெரியதாக்கி, அதையே பஞ்சாயத்தாக கூட்டி, கலாட்டா செய்யும் கதாபாத்திரத்தில் குரு ஜீவா அறிமுகமாகும் படம் ‘குரு உச்சத்துல இருக்காரு’.

 

இப்படத்தில் கதாநாயகியாக ‘பைசா’ பட நாயகி ஆரா நடித்துள்ளார். மேலும், ஆர்.பாண்டியராஜன், எம்.எஸ்.பாஸ்கர், இமான் அண்ணாச்சி, ஸ்ரீரஞ்சனி, மனோ, நமோ நாராயணன் ஆகியோர்கள் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார் பா.தண்டபாணி. இப்படத்தை பெஸ்ட் மூவிஸ் சார்பில் எம்.தனசண்முகமணி தயாரித்திருக்கிறார்.

 

இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு கேரளாவில் அடர்ந்த காட்டுப்பகுதியில் நடைபெற்றது. ஒரு முக்கிய காட்சியை படமாக்கும் போது, மெயின் ரோட்டிலிருந்து 3 கி.மீ அருகில் உள்ள அருவியில் படப்பிடிப்பை நடத்த முடிவு செய்திருக்கிறார்கள். லொக்கேஷன் பார்க்கும் போது அருவியில் வந்த தண்ணீர் படப்பிடிப்பின் போது அருவியில் தண்ணீர் வராததால், 70 லாரிகளில் தண்ணீர் வர வைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. 

 

அந்த அருவியில் நீர் வருவதை கண்டு, அங்குள்ள யானை ஒன்று தாகத்தை தீர்க்க அப்பகுதிக்கு வந்துள்ளது. யானையை பார்த்த ‘குரு உச்சத்துல இருக்காரு’ படக்குழுவினர் மிரண்டிருக்கின்றனர். ஆனால், அந்த யானையோ படக்குழுவினரை தொந்தரவு செய்யாமல் நீரை குடித்து விட்டு சென்றது. அதன் பின் தக்க பாதுகாப்புடன் மீதிப் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.