Aug 11, 2017 10:37 AM

நிஜ அண்ணன் தம்பிகள் நடிக்கும் ‘திருப்பதிசாமி குடும்பம்’

நிஜ அண்ணன் தம்பிகள் நடிக்கும் ‘திருப்பதிசாமி குடும்பம்’

ஜே.ஜே.குட் பிலிம்ஸ் பாபுராஜா, ஜெம்ஸ் பிலிம்ஸ் முருகானந்தம்  இணைந்து  வழங்கும் படம் ‘திருப்பதிசாமி குடும்பம்’.                                                                                                                   

இந்த படத்தில் ஜே.கே,ஜெயகாந்த் என்கிற இரண்டு கதாநாயகர்கள் அறிமுகமாகிறார்கள். கதாநாயகியாக ஐஸ்வர்யலஷ்மி நடிக்கிறார்.   முக்கிய வேடத்தில் ஜெயன் என்பவர் நடிக்கிறார். மற்றும் தேவதர்ஷினி, மயில்சாமி, முத்துராமன், கே.அமீர், கவிராஜ், சிசர்மனோகர் ஆகியோரும் நடிக்கிறார்கள்.                                                                              

 

ஒளிப்பதிவு - ஒய்.எம்.முரளி, இசை - சாம் டி.ராஜ், எடிட்டிங் - ராஜா முகமது, நடனம் - தினேஷ், ஹபீப், ஸ்டன்ட் - பயர் கார்த்திக், இணை தயாரிப்பு - திருப்பூர்  கே.எல்.கேமோகன். தயாரிப்பு - பாபுராஜா, பி.ஜாஃபர் அஷ்ரப். இயக்கம்   -  சுரேஷ் சண்முகம். இவர் வெற்றிபெற்ற அரசு, கம்பீரம் உட்பட பல படங்களை இயக்கியவர்.       

 

படம் குறித்து தயாரிப்பாளர் பாபுராஜா கூறுகையில், “சூப்பர் குட் பிலிம்ஸில் 25 வருடம் தயாரிப்பு நிர்வாகியாகவும், கபாலியில் தயாரிப்பு நிர்வாகியாகவும் பணிபுரிந்த நான்  முதன் முதலாக எனது மகன்களை கதாநாயகர்களாக வைத்து முடித்து U சர்டிபிகேட் வாங்கி சென்சார் குழுவினரால் பாராட்டையும் வாங்கிவிட்டேன். நான் ஏற்கெனவே அரசு, சத்ரபதி என்று இரண்டு படங்களை எடுத்திருக்கிறேன். இந்த படமும் வித்தியாசமான கதைக்களம் கொண்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு குடும்ப படமாகவும், ஜனரஞ்சகமான படமாகவும் இருக்கும். நாம் நமது வீட்டுக்கு பக்கத்தில் எதிரில் பார்க்கிற சராசரி அப்பா தான் திருப்பதிசாமி.

 

பக்கத்து வீட்டில் எதிர் வீட்டில் ஒரு பிரச்சனை என்றால் ஓடிப் போய் உதவி செய்யும் குணம். தன்னுடன் வேலை செய்யும் ஒருவனது பிரச்சனைக்கு ஆதரவு தரும் அன்புள்ளம் கொண்ட அமைதியான அவருக்கு மனைவி மகன்கள் மகள் என நேர்மையாக வாழும் குடும்பம். அப்படிப்பட்ட அவர்களுக்கு அதிகார பலம் கொண்ட ஒருவனது அடாவடியால் ஏற்படும் பிரச்சனை. ஆட்பலம், அதிகார பலம்  கொண்ட அவனையும் அவனது அராஜகத்துக்கு துணை போகும் அரசியல்வாதியையும் மூளை பலத்தால் திருப்பதிசாமியின் மகன்களான  இருவரும் எப்படி வெல்கிறார்கள் என்பது தான் கதை.

 

திருப்பதிசாமியாக ஜெயன் மகன்களாக எனது மகன்கள்  ஜே.கே ஜெயகாந்த்  நடித்திருக்கிறார்கள். மகன்கள் என்பதற்காக கதையை மீறி எதையும் திணிக்கவில்லை. கதைக்குண்டான கதாபாத்திரங்களாகத் தான் வருகிறார்கள் என்றார் தயாரிப்பாளர் பாபுராஜா. படம் விரைவில் வெளிவர இருக்கிறது.” என்றார்.