Aug 12, 2017 08:27 AM

‘தரமணி’ படத்திற்காக மனதளவில் நிறைய உழைத்திருக்கிறேன் - ஆண்ட்ரியா

‘தரமணி’ படத்திற்காக மனதளவில் நிறைய உழைத்திருக்கிறேன் - ஆண்ட்ரியா

ராம் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில், ஜே.எஸ்.கே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள தரமணி நேற்று வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ளது.

 

இந்த நிலையில், இப்படம் குறித்து பேசிய நடிகை ஆண்ட்ரியா, “இயக்குநர் ராம் சாருடன்  சில சந்திப்புகளிலேயே 'தரமணி' தொடங்கியது. 'தரமணி' படத்தில் எனது கதாபாத்திரம் இவ்வளவு துணிச்சலாக இருக்கும் என முதலில் நான் நினைக்கவில்லை. மக்களின் வரவேற்பையும் கருத்துக்களையும் பார்க்கும் பொழுது,  நான் எதிர்பார்த்ததை விட மிக துணிச்சலாக இந்த கதாபாத்திரம்  தோன்றுகிறது. எனது சொந்த உடல் மொழியையும் யதார்த்த  நடிப்பையும் வெளிப்படுத்த இயக்குநர் ராம் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். 'தரமணி' படத்திற்கு மனதளவில் நிறைய உழைப்பு தேவைப்பட்டது. எனது கலை திறமையையும் நேரத்தையும் மதிப்பவர்களோடு பணிபுரிவதே எனக்கு பிடிக்கும், ராம் சார் இவ்விரண்டு அம்சங்களையும் மிகவும் மதிப்பவர். ஒரு படம் பற்றிய அவரது அணுகுமுறையும் மிகவும் யதார்த்தமாக காட்சியமைக்கும் முறையும் எனக்கு பிடித்திருந்தது. நடிகர்களுக்கு எதையும் அறிவுறுத்தி திணிக்காமல் அவர்களுடன் படத்தின்  கதை மற்றும் அவர்களது காட்சிகள் பற்றி  ஒரு ஆரோக்கியமான விவாதம் நடத்தி படபிடிப்பு நடத்துவார் இயக்குநர் ராம். 

 

பெண்கள் ஆண்களுக்கு எல்லாவிதத்திலும் சமம் என்பது நிரூபணமாகி வரும் காலம் இது. ஆணைப் போல் ஒரு பெண்ணும்  ஒரு வேலைக்கு போய், சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்ற முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. ஆண்களை சார்ந்து வாழும் நிலை மாறி, பெண்கள் தங்களது அன்றாட தேவைகளை தாங்களே பூர்த்தி செய்துகொள்ளும் அளவிற்கு உயர்ந்துள்ளதால் ஆண்களின் ஈகோ பாதிக்கப்பட்டிருக்கிறது. நான் நம்பும் எனது இந்த சொந்த கருத்துக்களால் தான் 'தரமணி' படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.” என்றார்.