Aug 13, 2017 11:03 AM

கமர்ஷியல் படங்களில் நல்ல கருத்தை சொல்ல வேண்டும் - தயாரிப்பாளர் தாணு

கமர்ஷியல் படங்களில் நல்ல கருத்தை சொல்ல வேண்டும் - தயாரிப்பாளர் தாணு

ஆச்சி கிழவி திரைக்கூடம் சார்பில்  மா.திரவியபாண்டியன்  தயாரிப்பில் சொழிந்தியம்  வழங்கும் 'துப்பறிவு' 2020’ இசை ஆல்பம் ஒன்று உருவாகியுள்ளது. இது தூய்மை இந்தியா இயக்கம் சார்ந்து உருவாகியிருக்கிறது. ஒரு திட்டம் வெற்றி பெற அரசு மட்டும் போதாது மக்கள் ஒத்துழைப்பும் தேவை என்று வலியுறுத்துகிறது இந்த ஆல்பம்.

 

இதன் வெளியீட்டு விழா சமீபத்தில் பிரசாத் லேப் திரையரங்கில்  நடைபெற்றது. தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தமிழ் ஆல்பத்தை வெளியிட்டார். தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் இந்தி ஆல்பத்தை வெளியிட்டார்.

 

விழாவில் கலைப்புலி எஸ்.தாணு பேசும் போது , "இது ஒரு குடும்ப விழாவாக உணர்கிறேன். இதை இயக்கியுள்ள தினேஷின் தந்தை திரவிய பாண்டியன்  எது செய்தாலும் என்னிடம் கேட்டுத்தான் செய்வார். தன் மகன் இம்முயற்சியில் இறங்கிய போது வணிக அம்சங்களுக்கு இடம் தராமல் இனம் மொழி ,தேசம் என்று உயர்ந்த நோக்கத்துக்கு ஆதரவாக இருந்து ஊக்கப்படுத்தியிருக்கிறார். சினிமாவில் இந்த தம்பி நல்ல இலக்கை நோக்கிச் சென்று வெற்றி பெறுவார். இவர் ஒரு கமர்ஷியல் படம் செய்ய வேண்டும். எனக்கு ஒரு படம் இயக்க வேண்டும். ஷங்கர் , ஏ.ஆர். முருகதாஸ் எல்லாம்  கூட  கமர்ஷியல்ப டத்தில்தான் நல்ல கருத்தையும் சொல்வார்கள். அதே மாதிரி செய்யுங்கள்." என்று கூறி வாழ்த்தினார்.

 

பத்திரிகையாளர் சங்கத் தலைவர் சுபாஷ் பேசும் போது , "ஒரு டாக்டர் நோயாளியைக் காப்பாற்றவும் ஊசி போடலாம். ஒருவரை விஷ ஊசி போட்டுக்கொல்லவும்  ஊசி போடலாம். இப்படி  ஊசியை எப்படியும் பயன்படுத்தலாம். அதுபோல் தான் சினிமாவும் என்று கூறலாம். அப்படி நல்ல நோக்கத்துக்கு இந்த ஆல்பம் உருவாகியுள்ளது பெரிய விஷயம். வாழ்த்துகள்.” என்றார்.

 

தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் பேசும்போது, ”இருக்கும் தெரு சுத்தமானால் நாடு சுத்தமாகும். அப்பா ஒரு நல்ல தயாரிப்பாளர் மகனுக்கு நல்ல அங்கீகாரம் பெற இந்த ஆல்பத்துக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார். வாழ்த்துகள்”. என்றார்.

 

விழாவில் ஜாக்குவார் தங்கம் பேசும்போது, “துப்பறிவு என்கிற தலைப்பைப் பார்த்து விட்டு ஏதோ ஜேம்ஸ் பாண்ட் ரகப் படமோ என்று நினைத்தேன். இங்கு வந்த பிறகுதான் சமூகத்துக்குத் தேவையான ஒன்று என்று தெரிந்தது. படத்தில் குப்பை சேர்க்காதீர் என்று சொல்ல நினைக்கிற இளைஞனின் கோபம் புரிகிறது.  நீங்கள் சினிமாவுக்கு வந்து நல்ல படம் எடுப்பீர்கள். உங்கள் தமிழ் உணர்வைப் பாராட்டுகிறேன். தமிழனாக இருப்பதே பெருமை. வாழ்க. தமிழ்வெல்க”. என்று கூறினார்.

 

இப்படத்தை இயக்கியுள்ள தமிழ் ஆப்தன் என்கிற தினேஷ் பேசும் போது, “இது தூய்மையாக இருப்பதை வலியுறுத்தவே எடுக்கப்பட்டது. ஒரு நாடு சுத்தமாக இருக்க அரசு முயன்றால்  மட்டும் போதாது. மக்களும் ஒத்துழைக்க வேண்டும். நாட்டில் ஏராளமாகக் குவிந்து கிடக்கும் குப்பைகள் எல்லாம் மக்கள் போட்டதுதான். மக்களிடம் இது பற்றிய விழிப்புணர்வு வேண்டும் என்பதே இதன் நோக்கம். ஆனால் தணிக்கையில் சான்றிதழ் தரத் தயங்குகிறார்கள். தராமல் ஏதேதோ சொல்லி இழுத்தடிக்கிறார்கள். ஆறு ரிவ்யூ ஆகி விட்டது. இன்னமும் சான்றிதழ் தரவில்லை. போராடிச் சோர்வு அடைந்து விட்டோம். கேள்வி கேட்டால் அரசை எதிர்ப்பதாக தவறாக நினைக்கிறார்கள். பிரச்சினை என்று இருந்தால் கேள்வி வரத்தான் செய்யும். ஒரு படைப்பு கேள்வி கேட்டால் அரசு விரோதமா?  கேள்வி கேட்டாலே பயப்படுவது ஏன்? போராடிப் பார்த்து விட்டு இன்று மாலை ஆன்லைனில் வெளியிடுகிறோம்.” என்றார்.

 

இவ்விழாவில் ஆல்பத்தில் நடித்துள்ள பாடகர் வீரமணிதாசன், இசையமைப்பாளர் பினூப் ராகினி, ஒளிப்பதிவாளர் அசோக் பன்னீர்செல்வம் உள்ளிட்ட படக்குழு வினரும்  கலந்து கொண்டனர்.

 

இந்த ஆவணப் படத்துக்காக  வாரணாசி, அலகாபாத் ,சென்னை போன்ற பல இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது. துப்பறிவு 2020  யூடியூப் தளத்தில் உலகெங்கும் உலா வரவுள்ளது.