Aug 15, 2017 02:37 PM

தயாரிப்பாளர்களை சீண்டிய சிவகார்த்திகேயனுக்கு ரூ.1 கோடி அபராதம்!

தயாரிப்பாளர்களை சீண்டிய சிவகார்த்திகேயனுக்கு ரூ.1 கோடி அபராதம்!

சிவகார்த்திகேயன், நயந்தாரா நடிப்பில் உருவாகும் ‘வேலைக்காரன்’ படத்தை மோகன் ராஜா இயக்க, 24 ஏம்.எம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார். சிவகார்த்திகேயனை வைத்து தொடர்ச்சியாக மூன்று படங்களை தயாரித்துக் கொண்டிருக்கும் ஆர்.டி.ராஜா, அனைத்து படங்களிலும் முன்னணி ஹீரோயின், பெரிய அளவில் விளம்பரம் என்று அனைத்தையுமே பிரம்மாண்டமாக செய்து வருகிறார். இத்தனைக்கும் சிவகார்த்திகேயனை வைத்து இவர் தயாரித்த ‘ரெமோ’ படுதோல்வியை சந்தித்தாலும், தனது படங்களுக்கு இவர் செய்யும் செலவுகள் தமிழ் சினிமாவையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

இந்த நிலையில், ‘வேலைக்காரன்’ படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக டீசர் வெளியாகிறது என்பதை அறிவிக்கும் விளம்பரங்கள் பத்திரிகைகளில் கொடுக்கப்பட்டது. இதில் முன்னணி தமிழ் நாளிதழ்கள் சிலவற்றில் ‘வேலைக்காரன்’ படத்தின் விளம்பரம் முழு பக்கத்திற்கு கொடுக்கப்பட்டது, தமிழ் சினிமா தயாரிப்பாளர்களை ஆத்திரப்படுத்தியுள்ளது.

 

காரணம், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் விதிமுறைப்படி, பெரிய நடிகரோ, சிறிய நடிகரோ, பெரிய பட்ஜட் படமோ, சிறிய பட்ஜட் படமோம், பத்திரிகைகளை ஒரு படத்திற்கு விளம்பரம் என்பது அதிகபட்சமாக அரைக்கால் பக்கத்திற்கு மட்டுமே கொடுக்க வேண்டும். பணம் உள்ள தயாரிப்பாளர்கள் முழு பக்கத்திற்கு விளம்பரம் கொடுத்தால், சிறு பட்ஜெட் படங்களின் விளம்பரமும், அப்படமும் காணாமல் போய்விடும் என்பதால், இந்த கட்டுப்பாடு.

 

இந்த கட்டுப்பாடுக்கு உட்பட்டு தான் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்கள் கூட குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே விளம்பரம் கொடுக்கப்பட்டு வந்த நிலையில், சிவகார்த்திகேயனின் படம் இந்த கட்டுப்பாட்டை மீறியதால், தயாரிப்பாளர்கள் பலர் தங்களது குமுறலை சங்கத்து நிர்வாகிகளிடம் தெரிவித்து வருவதோடு, பிற சில விஷயங்களிலும் சிவகார்த்திகேயன் சங்கத்தின் விதிமுறைகளை மீறியிருப்பதாகவும் சுட்டிக்காட்டி வருகிறார்கள்.

 

குறிப்பாக, கடந்த தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகத்தின்போது டிவி சேனல்களோடு நடத்திய பேச்சு வார்த்தையில் எந்தவித உடன்பாடும் எட்டப்படாததால்,  எந்த நடிகர்களும் சேனல்களுக்கு சீஃப் கெஸ்ட்டாக செல்வதோ, சேனல்கள் நடத்தும் விழாக்களில் கலந்து கொள்வதோ, கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. ஆனால், அதை மீறி விஜய் டிவி மலேசியாவில் நடத்திய விழாவில் சிவகார்த்திகேயன் கலந்துக்கொண்டார். அப்போதே அவரை கண்டித்திருந்தால், இப்போது இந்த நிகழ்வு நடந்திருக்காது. அன்று பொறுப்பில் இருந்தவர்கள் அவரவர் தேவைக்காக அனைவரையும் அரவணைத்துப் போனதுதன் விளைவே இன்று விதி மீறல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது, என்று தயாரிப்பாளர் ஒருவர் தனது குமுறலை தெரிவித்துள்ளார்.

 

தயாரிப்பாளர்களின் இந்த புகார்கள் காரணமாக ‘வேலைக்காரன்’ படத்தை தயாரிக்கும் 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் நிறுவனத்திற்கு தயாரிப்பாளர் சங்கம் ரூ.1 கோடி அபராதம் விதித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், தயாரிப்பாளர் சங்கம் சார்பாக இது குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

 

மொத்தத்தில், ஒட்டு மொத்த தமிழ் சினிமா தயாரிப்பாளர்களின் வயிற்றை ‘வேலைக்காரன்’ மூலம் சிவகார்த்திகேயன் ரொம்பவே சூடாக்கிவிட்டார்.