Apr 16, 2018 07:54 AM

எம்.ஜி.ஆர் புத்தக வெளியீட்டு விழா - சூர்யா, கார்த்தி பங்கேற்பு!

எம்.ஜி.ஆர் புத்தக வெளியீட்டு விழா - சூர்யா, கார்த்தி பங்கேற்பு!

எம்.ஜி.ஆர் ஆட்சியில் இருந்த போது ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்த கற்பூர சுந்தரபாண்டியன் ‘நான் கண்ட எம்.ஜி.ஆர்’ என்ற தலைப்பில், எம்.ஜி.ஆர் பற்றி புத்தகம் எழுதியுள்ளார். இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் சூர்யா, கார்த்தி, நடிகைகள் லதா, அம்பிகா உள்ளிட்ட பல நடிகர் நடிகைகள், வி.ஜி.சந்தோஷம், ஏ.சி.சண்முகம், இதயக்கனி எஸ்.விஜயன், வள்ளி நாயகம் என ஏராளமானோர் கலந்துக்கொண்டார்கள்.

 

இந்த புத்தகத்தின் முதல் பிரதியை வி.ஜி.சந்தோசம் வெளியிட ஏ.சி.சண்முகம் பெற்றுக் கொண்டார்.

 

புத்தகம் குறித்து கற்பூர சுந்தரபாண்டியன் பேசுகையில், “நான் இந்த புத்தகத்தை வெளியிட வேண்டும் என்று நினைத்த போது  புரட்சி தலைவர்க்கு நெருக்கமான யாரவது தான் வெளியிட வேண்டும் என்று நினைத்தேன். மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழாவை மலேசியாவில் நடத்திய வி.ஜி.சந்தோசம் மற்றும் சென்னையில் பிரமாண்டமாக நடத்திய ஏ.சி.சண்முகம்  அவர்களும் அவ்விழாவிற்கு என்னை அழைத்து சிறப்பித்தார்.

 

இப்புத்தகத்தில் புரட்சி தலைவரை பற்றி யாரும் அறியாத பல விஷயங்களை ஒன்றாக தொகுத்துள்ளேன்.

 

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர், மதுரையில் நடந்த அகில உலக எம்.ஜி.ஆர் மன்ற பேரணி அணிவகுப்பில்  அப்போது கலந்து கொண்டார். பேரணி மற்றும் மாநாட்டை துவக்கி வைக்க விழா மேடை ஏறும் பொது எம்.ஜி.ஆர் அங்கே மோர் விற்கும் மூதாட்டி ஒருவரை பார்த்தார். அதை அருகில் இருந்த நானும் பார்த்தேன். பேரணியில் அணிவகுத்து  செல்லும் தொண்டர்களை பார்த்து கையசைக்கும் அவர் பின்னால் திரும்பி பார்த்தார். அந்த இடத்தில்  அந்த மூதாட்டி இல்லை. உடனே அவரிடம் சென்று அந்த மோர் விற்கும் மூதாட்டியை அழைத்து வரவா என்றேன் அவரும் மகிழ்ச்சியுடன் சரி என்றார்.

 

அங்கே இருந்த காவல்துறை அதிகாரிகளிடம் சொல்லி அந்த மோர் விற்க்கும் பாட்டியை அரை மணி நேரத்தில் அழைத்து வந்தேன். எம்.ஜி.ஆர் முகத்தில் அவ்வுளவு மகிழ்ச்சி. அந்த பாட்டியின் அருகே சென்று அதன் பையில் இருந்த பணம் எவ்வுளவு என்று கூட எண்ணாமல் ஒரு கட்டு ரூபாய் நோட்டுகளை அள்ளி கொடுத்தார். கொடுத்துவிட்டு ஏதாவுது கடை வைத்து பிழைத்துக் கொள்ளுங்கள் என்றார். அதுதான் எம்.ஜி.ஆர். இதை போன்ற அவரை பற்றி யாருக்கும் தெரியாத விஷயங்கள், நான் அருகிலிருந்து பார்த்த பல விஷயங்கள் இந்த புத்தகத்தில் உள்ளது.” என்றார்.

 

ஏ.சி.சண்முகம் பேசும் போது, “புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் மிக தீவிரமான ரசிகரான என்னை போன்றவர்களுக்கு கற்பூர சுந்தரபாண்டியன் எழுதியுள்ள இந்த புத்தகமும் மிகபெரிய விருந்து. எம்.ஜி.ஆர் அவர்களுடன்   கற்பூர சுந்தரபாண்டியன்  உறவு பற்றி எவ்வளவோ பேசலாம். எம்.ஜி.ஆர் ஆட்சியில் இருந்த போது  IAS அதிகாரியாக  கற்பூர சுந்தரபாண்டியன் இருந்தார். அவர், அவருடைய பணியை  முடித்து இரவு வீட்டிற்கு செல்ல மிகவும் தாமதமாகிவிடும். இரவு எம்.ஜி.ஆர் அவர்களுடன் உணவருந்திவிட்டு தான் அவர் வீட்டிற்கு செல்வார். இப்புடி நிறைய நிகழ்வுகளை சொல்லிக்கொண்டே போகலாம்.” என்றார்.