Aug 17, 2017 12:01 PM

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகும் ‘களரி’

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகும் ‘களரி’

நட்சத்திரா மூவி மேஜிக் நிறுவனம் சார்பில் செனித் கொலோத் தயாரிக்கும் படம் ‘களறி’. கிருஷ்ணா ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் வித்யா பிரதீப், சக்யுக்தா மேனன், எம்.எ.ஸ்.பாஸ்கர், ஜெயபிரகாஷ், பிளாக் பாண்டி, சென்றாயன், விஷ்ணு, கிருஷ்ணதேவா, மீரா கிருஷ்ணன், அஞ்சலி தேவி, ரியாஸ் தோஹா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

 

இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி கிரண் சந்த் இயக்க, ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரபாகர் படத்தொகுப்பு செய்ய, பிரபல பின்னணி பாடகர் வி.வி.பிரசன்னா இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். கவிஞர் முத்துவிஜயன், கவிஞர் வைரபாரதி, கவிஞர் ப்ரானேஷ், கவிஞர் தினேஷ் ஆகியோர்கள் பாடல்களை எழுதியிருக்கிறார்கள். நந்தன் கலை இயக்கத்தை கவனிக்க, சண்டை பயிற்சியை ஸ்டன்னர் ஷாம் மேற்கொள்கிறார்.

 

இப்படம் குறித்து இயக்குநர் கிரண் சந்த் பேசும் போது, “’களரி’ என்றால் தற்காப்பு கலை என்று அனைவரும் கருதுகிறார்கள். ஆனால் களரி என்றால் போர்களம் என்பது தான் பொருள். ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் ஒரு போர்களம் தான். அதை மையப்படுத்தி தான் இந்த டைட்டில் இருக்கிறது.

 

கொச்சி மாநகரத்தில் வாத்துருத்தி என்ற ஒரு பகுதி இருக்கிறது. இது தமிழர்கள் அதிகம் வாழும் பகுதி. இப்பகுதியை கதைக்களமாக கொண்டு தான் திரைக்கதையை அமைத்திருக்கிறேன். நடிகர் கிருஷ்ணா இதில் ஒரு சராசரி இளைஞர் கேரக்டரில் நடித்திருக்கிறார். இவருக்கும், இவருடைய தந்தைக்கும் இடையே தலைமுறை இடைவெளியால் ஏற்படும் சிக்கல்களும், அதைத் தொடர்ந்து நடைபெறும் உணர்ச்சிகரமான நிகழ்வுகளும் தான் படத்தின் கதை.

 

உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டும், காதல், சென்டிமெண்ட், காமெடி, ஆக்ஷன் என அனைத்து தரப்பு ரசிகர்களை கவரும் வகையிலும் ‘களரி’ உருவாகியிருக்கிறது.” என்றார்.