Apr 19, 2018 07:31 AM

தமிழகத்தில் மீண்டும் பீட்டா - ஜீவா படத்திற்கு நோட்டீஸ்!

தமிழகத்தில் மீண்டும் பீட்டா - ஜீவா படத்திற்கு நோட்டீஸ்!

தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் பல்வேறு போராட்டங்களுக்கு முன்னோடியாக அமைந்தது மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தான். இந்த போராட்டத்தில் வெளிநாட்டு குளிர்பான நிறுவனங்களுக்கு மட்டும் இன்றி பீட்டா என்ற அமைப்புக்கும் தமிழக மக்கள் பெரும் அதிர்ச்சியளித்தனர். அதிர்ச்சியோடு தமிழகத்தை விட்டு வெளியேறிய பீட்டா அமைப்பு தற்போது மீண்டும் தமிழகத்தில் எட்டிப்பார்த்துள்ளது.

 

இந்த முறை பீட்டாவின் கண்ணில் பட்டிருப்பது நடிகர் ஜீவா நடிப்பில் இருவாகிக் கொண்டிருக்கும் ‘கொரில்லா’ படம் தான். இதில் காங் என்ற சிம்பன்ஸியை நடிக்க வைத்துள்ளனர். இந்த சிம்பன்ஸி குரங்கு நடித்துள்ள அனைத்துக் காட்சிகளும் தாய்லாந்து நாட்டில் படமாக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில், பீட்டாவின் இந்திய அலுவலர் சச்சின் பங்கேரா கொரில்லா படத்தில் சிம்பன்ஸி நடிப்பது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரில்லா' படத்தின் இயக்குநர் டான் சாண்டியை உண்மையான சிம்பன்ஸியை வைத்துப் படமாக்குவதை குறைத்துக்கொண்டு ஹாலிவுட்டில் எடுக்கப்படுவதுபோல கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மீதமிருக்கும் சிம்பன்ஸி சம்பந்தமான பகுதிகளைப் படமாக்கலாம்.

 

முற்போக்கு சிந்தனை மிக்க எந்த ஒரு இயக்குநரும் ஒரு விலங்கை பரபரப்பான படப்பிடிப்பு தளத்துக்குக் கொண்டுவந்து நடிக்கவைக்க கனவில்கூட நினைக்கமாட்டார். தவிர, படப்பிடிப்புகளில் குறைவான நேரத்தில் 'சரியாக' நடிக்க வேண்டுமென ஒரு விலங்கை அதன் பயிற்சியாளர் அடித்து, உதைத்துத் துன்புறுத்துவார்.

 

தொலைக்காட்சி, சினிமா மற்றும் விளம்பரப் படங்களுக்காக இத்தகைய நடிப்புப் பயிற்சி கொடுக்கப்படும் விலங்குகள் பிறந்த உடனேயே அவற்றின் தாயிடமிருந்தும், அதன் வாழ்வியல் சூழலில் இருந்தும் பிரிக்கப்பட்டு வாழ்நாள் முழுதும் துன்புறுத்தப்படுகிறது. இப்படிக் கூண்டுக்குள்ளேயே வளர்க்கப்படும் விலங்குகள் பெரிதும் மன உலைச்சலுக்கு ஆளாகி, அதைக் கையாள முடியாத சூழலுக்கும் தள்ளப்படும் வாய்ப்பு இருக்கிறது. 

 

இப்படியெல்லாம் துன்பறுத்தாமல் 'ஜங்கிள் புக்', 'பிளானட் ஆஃப் தி ஏப்ஸ்' போன்ற பல திரைப்படங்கள் நவீன தொழில்நுட்பத்தின் உதவியோடு, யாருக்கும் தீங்கு விளைவிக்காமல் படம் எடுக்கிறார்கள்" என்று தெரிவித்திருக்கிறார்.

 

சச்சினின் இந்த அறிக்கையால் ‘கொரில்லா’ படக்குழுவினர் சற்று பீதியடைந்திருந்தாலும், அதே சமயம் சிம்பன்ஸியை வைத்து எடுக்கப்பட வேண்டிய காட்சிகள் அனைத்தையும் முடித்துவிட்டார்களாம். இனி சிம்பன்ஸியின் காட்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்றால் அதை கிராபிக்ஸ் காட்சிகளாகவே எடுத்துக்கொள்ளும் முடிவுக்கும் வந்துவிட்டதால், பீட்டாவினால் தங்களது படத்திற்கு எந்த பாதிப்பும் வராது என்று நம்பிக்கை தெரிவித்து தயாரிப்பு தரப்பு.