”ஜெயலலிதாவுக்கு பிறகு விஜய்...” - வைரலாகும் ராதாரவி பேச்சு
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘விஜய் 62’ படத்தில் ராதாரவி முக்கிய வேடம் ஒன்றில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் விஜயுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், தற்போது விஜய் குறித்து இவர் பேசியிருப்பதும் வைரலாகியுள்ளது.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் விஜய் 62 படம் குறித்து பேசிய ராதாரவி, “ஜெயலலிதாவிற்கு பிறகு நடிகர் விஜயின் வீட்டிற்கு தான் நான் குடும்பத்துடன் சென்று புகைப்படம் எடுத்துக்கொண்டேன். என் பேரன் விஜய் மீது பைத்தியமாக இருப்பான். நான் ‘சுறா’ படம் நடிக்கும் போதே அவருடன் போட்டோ எடுக்க வேண்டும் என கேட்டான். அந்த ஆசை முருகதாஸ் படத்தில் நடிக்கும் போது நிறைவேறியுள்ளது.
விஜய் இந்த மண்ணின் மைந்தர், ரசிகர்கள் ஆதரவளித்து அவர் அரசியலுக்கு வந்தால் நான் வரவேற்பேன். அதே சமயம், அவரின் கொள்கை பற்றி கேள்வி கேட்பதை தவிர்க்க முடியாது.” என்று கூறியுள்ளார்.