Aug 18, 2017 07:59 AM

அரசியல் ஒத்திகை பார்க்கும் ரஜினி - பிரம்மாண்ட கூட்டத்திற்கு ஏற்பாடு!

அரசியல் ஒத்திகை பார்க்கும் ரஜினி - பிரம்மாண்ட கூட்டத்திற்கு ஏற்பாடு!

தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவது யார்? என்ற கேள்விக்கு விடை இல்லாமல் தமிழகம் தவித்துக் கொண்டிருக்க, இந்த வெற்றிடத்தை நிரப்ப பல தலைவர்கள் பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களுக்கு மத்தியில், தமிழகத்தின் ஆட்சியை கைப்பற்றும் நோக்கத்தில் தற்போது ரஜினிகாந்தும் செயல்பட்டு வருகிறார்.

 

ரஜினிகாந்தின் அரசியல் நடவடிக்கை ஒரு பக்கம் இருக்க, கமல்ஹாசனின் அதிரடி எண்ட்ரியால் தற்போது ஆளும் தமிழக அரசே சற்று ஆட்டம் கண்டு வருகிறது. எது எப்படியோ, தமிழகத்தில் தேர்தல் வரும் போது, ரஜினி அல்லது கமல் இருவரில் ஒருவர் நேரடி அரசியலில் இறங்கப்போவது உறுதியாகிவிட்டது.

 

இந்த நிலையில், தான் அரசியலுக்கு வந்தால் மக்கள் ஏற்றுக்கொள்வார்களா?, தனது பேச்சு எடுபடுமா? என்பதை சோதித்து பார்க்கும் விதத்தில், பிரம்மாண்ட கூடம் ஒன்றை நடத்த ரஜினிகாந்த் முடிவு செய்துள்ளார்.

 

திருச்சியில் வரும் ஆகஸ் 20 ஆம் தேதி நடத்தப்பட உள்ள இந்த கூட்டத்தில் ரஜினிகாந்த் நேரடியாக பங்கேற்கவில்லை என்றாலும், இது முழுக்க முழுக்க ரஜினிகாந்தின் அரசியல் ஒத்திகைக்கான கூட்டம் என்றே கூறப்படுகிறது.

 

ரஜினிகாந்தின் நண்பரும், அரசியல் ஆலோசகருமான காந்திய மக்கள் இயக்கம் தலைவர் தமிழருவி மணியன் மூலம் நடத்தப்படும் இந்த கூட்டத்திற்கு, ரசிகர்கள் திரளாக பங்கேற்க வேண்டும், என்று ரஜினி தலைமை ரசிகர் மன்றத்தில் இருந்து, அனைத்து மாவட்ட ரசிகர் மன்றத்திற்கும் ரகசிய சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாம். மேலும், கூட்டத்தில் ஒவ்வொறு மன்றத்தில் இருந்தும் எத்தனை பேர் கலந்துக் கொள்கிறார்கள் என்பதை தலைமை மன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருப்பதோடு, கூட்டத்தில் பேசப்படும் கருத்துக்களை கவனமாக கேட்டு, பின் அது பற்றி தங்களது கருத்துக்களை தலைமை மன்றத்திடம் தெரிவிக்க வேண்டும், என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.