May 26, 2018 11:18 AM

ஒரே நாளில் ராஜ் டிவியில் 5 புதிய தொடர்கள் ஆரம்பம்!

ஒரே நாளில் ராஜ் டிவியில் 5 புதிய தொடர்கள் ஆரம்பம்!

கடந்த ஐந்து வருடங்களாக சின்னத்திரை உலகில் விரல் விட்டு எண்ணக்கூடிய வகையில் கோலோச்சி வரும் தயாரிப்பு நிறுவனங்களில் மிக முக்கியமானது ஸ்ரீ பாரதி அசோசியேட் நிறுவனம் தான்.  ஸ்ரீ பாரதி குரூப்பின் ஒரு அங்கமான இந்த நிறுவனம் சின்னத்திரையில் மக்கள் விரும்பும் ஜனரஞ்சகமான நெடுந்தொடர்களை தயாரித்து ராஜ் டிவி, விஜய் டிவி, ஜீ டிவி, ரேடியோ மிர்ச்சி என முக்கிய சேனல்களில் ஒளிபரப்பி வருகிறது.

 

இந்த நிறுவனம் தயாரித்துள்ள ‘உறவுகள் சங்கமம்’ மெகா தொடர், சீரியல் வரலாற்றிலயே முதன்முறையாக அதிகப்படியான (40) முன்னணி நடிகர்கள் நடிக்கும் தொடர் என பெயர் பெற்றுள்ளதுடன் 236 எபிசோடுகளை தொட்டுள்ளது. அந்தவகையில் தனது பொழுதுபோக்கு தயாரிப்புகளை கொண்டு மக்களை மகிழ்வித்துவரும் ஸ்ரீ பாரதி அசோசியேட் நிறுவனம் தற்போது ஒளிபரப்பாகி வரும் தொடர்கள் மூலம் 998 எபிசோடுகளை எட்டிவிட்டது.

 

தனது 1000வது எபிசோடு என்கிற மிகப்பெரிய மைல்கல்லை வரும் மே-28ஆம் தேதி எட்டவுள்ளது. அந்தநாள் வெறுமனே ஒரு சாதாரண நாளாக கடந்துபோகப்போவதில்லை. ஆம்.. இன்னும் புதிய ஐந்து மெகா தொடர்களை தயாரித்துள்ள ஸ்ரீ பாரதி அசோசியேட் நிறுவனம், அதேநாளில் இந்த தொடர்களை ராஜ் டிவியில் ஒளிபரப்ப ஆரம்பிக்க இருக்கிறது என்பதுதான் இதில் ஹைலைட்டான அம்சமே.

 

கண்ணம்மா, ஹலோ சியாமளா, நலம் நமறிய ஆவல், கடல் கடந்து உத்தியோகம், கங்காதரனை காணோம் என்கிற இந்த ஐந்து நெடுந்தொடர்களுக்கான அறிமுக விழா சென்னை சோழா ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஸ்ரீ பாரதி அசோசியேட் சேர்மன் திரு.டி.ஆர்.மாதவன், ராஜ் டிவி நிர்வாக இயக்குனர்கள் ராஜேந்திரன், ராஜரத்தினம், ரவீந்திரன், ரகுநாதன் மற்றும் இந்த தொடர்களில் நடிக்கும் நடிகர் நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்துகொண்டனர்.

 

இவை ஐந்தும் ஐந்துவிதமான கதையம்சம் கொண்ட தொடர்களாக உருவாகி வருகின்றன. இதில் கண்ணம்மா தொடர், ஒரு பெண் தான் பிறந்தது முதல் வாழ்க்கையில் என்னவெல்லாம் கஷ்டங்களை அனுபவித்து முன்னுக்கு வர போராடுகிறாள் என்பதை பற்றியது.. ஹலோ சியாமளா தொடரில் நான்கு பெண்களை பெற்ற தாய் ஒருத்தி, அவர்களுக்கு ஒரேநாளில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யும் சமயத்தில் திடீரென கர்ப்பமாவதால் உண்டாகும் கலாட்டாக்களை காமெடியாக சொல்ல இருக்கிறது. இரண்டு நண்பர்களை பற்றிய கதையாக ‘நலம் நலமறிய ஆவல்’ தொடர் உருவாகிறது.

 

குடும்பத்தை பிரிந்து வெளிநாடுகளில் சென்று வேலை பார்ப்போரின் வாழ்க்கையையும் வலியையும் பறைசாற்ற வரவிருக்கிறது ‘கடல் கடந்து உத்தியோகம்’ தொடர்.. ஒரு தந்தை தனது பிள்ளைகளால் எப்படி எமோஷனலாக பாதிக்கப்படுகிறார் என்பதை ‘கங்காதரனை காணோம்’ தொடர் வெளிச்சம்போட்டு காட்டவுள்ளது.

 

இவை அனைத்தும் வரும் மே-28ஆம் தேதியில் ஆரம்பித்து. திங்கள் முதல் வியாழன் வரை இரவு ஏழு மணியில் இருந்து அரை மணி நேர தொடர்களாக அடுத்தடுத்து ஒளிபரப்பாக இருக்கிறது.  

 

இந்த தொடர்கள் தவிர கூடிய விரைவில் 2 மாதங்களுக்கு ஒரு புராணம் என்கிற வகையில் ஒவ்வொன்றும் 8 எபிசோடுகளை கொண்ட புராண தொடர்களும் ஒளிபரப்பாகும் வகையில் ஸ்ரீ பாரதி அசோசியேட் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.