Aug 20, 2017 04:40 PM

ரஜினிக்காக குழந்தைகளிடம் கையெழுத்து வேட்டை நடத்தும் ‘கபாலி’ செல்வா!

ரஜினிக்காக குழந்தைகளிடம் கையெழுத்து வேட்டை நடத்தும் ‘கபாலி’ செல்வா!

’ஆத்தா உன் கோயிலிலே’ படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவான செல்வா, தொடர்ந்து பல தமிழ்ப் படங்கள் மட்டும் இன்றி தெலுங்கு படத்திலும் ஹீரோவாக நடித்தவர், ‘கோல்மால்’ படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார். தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் செல்வா, தனது பெயரை ‘கபாலி’ செல்வா, என்று மாற்றிக் கொண்டு ‘12.12.1950’ என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார்.

 

முழுக்க முழுக்க ரஜினிகாந்தின் ரசிகர்கள் பற்றிய படமாக உருவாகும் இப்படத்தில் மட்டும் அல்ல, நிஜத்திலும் செல்வா ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் ஆவார்.

 

தனது வாழ்க்கையில், ரஜினி ரசிகராக தான் சந்தித்த ஒரு சம்பவத்தை மையமாக வைத்து இந்த கதையை உருவாக்கியுள்ள கபாலி செல்வா, இப்படத்தை முழுக்க முழுக்க காமெடி படமாக இயக்கியிருப்பதுடன், செண்டிமெண்ட் மற்றும் திரில்லர் படமாகவும் இயக்கியிருக்கிறார்.

 

இதில், தம்பி ராமையா, ரமேஷ் திலக், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், ஜான் விஜய், ஆதவன், அஜய் பிரசாத், பிரஷாந்த் கிருபாகரன், அஸ்வினி, ரிஷா, சாமிநாதன், குமரவேல், டெல்லி கணேஷ், பொன்னம்பலம், ஷபி, நந்தா சரவணன், ராமதாஸ், சேரன் ராஜ், ஏழாம் அறிவு சுப்பிரமணியன், பாலாஜி மோகன் என்று பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள்.

 

ஜோஸ்டார் எண்டர்பிரைசஸ் சார்பில் எம்.கோடீஸ்வர ராஜு தயாரித்துள்ள இப்படத்திற்கு விஷ்ணு ஸ்ரீ.கே ஒளிப்பதிவு செய்ய, ஆதித்யா - சூர்யா இசையமைத்துள்ளனர். முத்தமிழ் பாடல்கள் எழுதியுள்ளார்.

 

42 ஆண்டுகளாக ரஜினிகாந்தின் தீவிர ரசிகராக இருக்கும் செல்வா, இப்படத்துடன் ரஜினிக்காக வேறு ஒரு நல்ல விஷயத்தையும் செய்யப் போகிறார். அதாவது ரஜினிகாந்த் சிகரெட் பிடிப்பதை பார்த்து தான் பல இளைஞர்கள் அப்பழக்கத்திற்கு ஆளானார்கள், என்ற குற்றச்சாட்டு இறுக்கிறது. அதை மாற்றும் வகையில், இனி யாரும் சிகரெட் பழக்கத்திற்கு ஆளாதவாறு ஒரு கையெழுத்து முகாமை கபாலி செல்வா நடத்த இருக்கிறார்.

 

ஆனால், இது புகை பழக்கம் உள்ள இளைஞர்களுக்கான கையெழுத்து வேட்டையல்ல, இளைஞர்களான பிறகு இந்த புகை பழக்கத்திற்கு உள்ளாகமல் இருக்க, இப்போது சிறுவர்களாக இருக்கும் நாளைய இளைஞர்களிடம் நடத்தப்பட இருக்கும் கையெழுத்து வேட்டையாகும். ஒரு லட்சம் குழந்தைகளிடம், தாங்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆன பிறகு, எந்த நேரத்திலும் சிகரெட் புகைக்க மாட்டோம், என்ற உறுதிமொழியில் கையெழுத்து வாங்கப் போகிறாராம். அப்படி வாங்கும் குழந்தைகளின் ஒரு லட்சம் உறுதி மொழி சான்றிதழ்களை ரஜினிகாந்தின் பிறந்தநாளன்று அவரது பிறந்தநாள் பரிசாகவும் தர கபாலி செல்வா முடிவு செய்திருக்கிறாரம்.

 

இந்த கையெழுத்து வேட்டை குறித்து கபாலி செல்வா ரஜினிகாந்திடம் கூறிய போது, “நல்ல விஷயம், பண்ணுங்க” என்று ஊக்கம் அளித்து உற்சாகமும் படுத்தியுள்ளார்.