Mar 29, 2016 07:17 PM

இசைஞானியை கொண்டாடுகிறோம் - ஆனந்தத்தில் சசிகுமார்

இசைஞானியை கொண்டாடுகிறோம் - ஆனந்தத்தில் சசிகுமார்

சென்னை,மார்ச் 29 :’தாரை தப்பட்டை’ படத்திற்காக இளையராஜாவுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. இதனால், இளையராஜாவுக்கு பலரும் வாழ்த்து தெரிவிக்க, இப்படத்தினை தயாரித்த நடிகரும், இயக்குநருமான சசிகுமார், ஆனந்தத்தில் மிதந்துக்கொண்டிருக்கிறாராம்.

 

அப்படியே, தனது ஆனந்தத்தினை வார்த்தைகளாக வடித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எமது கம்பெனி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான 'தாரை தப்பட்டை' படத்துக்கு சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது கிடைத்திருக்கிறது. இசையுலகின் ஆகச்சிறந்த பெருமகன் இளையராஜா அவர்களின் 1000-வது படமாக 'தாரை தப்பட்டை' அமைந்ததே எங்களுக்கான பெரிய விருது என மகிழ்ந்திருந்த வேளையில், சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதும் கிடைத்திருப்பது இரட்டிப்பு கொண்டாட்டமாக அமைந்திருக்கிறது. இசைஞானி ராஜா சாரை இந்திய தேசமே கொண்டாடும் சூழலில் ரசிகர்களோடு ரசிகர்களாக நாங்களும் இந்த மகிழ்வில் கலக்கிறோம்; இசைஞானியைக் கொண்டாடுகிறோம். தாரை தப்பட்டை படத்தின் இயக்குநரான பாலா அண்ணனை இந்த நேரத்தில் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறோம். அவரால் தான் அனைத்தும் சாத்தியமானது என்பது ஒருபோதும் மறுப்பதற்கில்லை.

 

'பசங்க', 'தலைமுறைகள்' வரிசையில் எங்களின் 'தாரை தப்பட்டை' படமும் தேசிய விருது பட்டியலில் இடம் பெற்றிருப்பது பெரிய நம்பிக்கையாக  அமைந்திருக்கிறது. இதற்காக உழைத்த 'தாரை தப்பட்டை' படக் குழுவினர் அனைவரையும் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறோம். 

 

சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது பெற்றிருக்கும் பாசத்துக்குரிய சகோ சமுத்திரக்கனி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். தேசிய விருதுகளைக் குவித்திருக்கும் விசாரணை படக் குழுவினருக்கும், இறுதிச்சுற்று குழுவினருக்கும் மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம். 

 

தமிழ் திரையுலகுக்கு கிடைத்திருக்கும் தேசிய அங்கீகாரங்களால் மகிழ்ந்திருக்கும் ரசிகர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் என் அன்பையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.