Jul 13, 2018 04:27 PM

சாயாஜி ஷிண்டே நடிப்பில் உருவாகும் ‘அகோரி’!

சாயாஜி ஷிண்டே நடிப்பில் உருவாகும் ‘அகோரி’!

பிரபல நடிகர் சாயாஜி ஷிண்டேவின் வித்தியாசமான நடிப்பில் உருவாகும் படம் ‘அகோரி’. அறிமுக இயக்குநர் டி.எஸ்.ராஜ்குமார் இயக்கும் இப்படத்தை ஆர்.பி.பிலிம்ஸ் சார்பில் பாலா மற்றும் மோஷன் பிலிம் பிக்சர் சார்பில் சுரேஷ் கே.மேனன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

 

சிவனடியாராக உள்ள ஒரு அகோரிக்கும், தீய சக்திகளுக்கும் இடையே நடக்கும் போராட்டமே இப்படத்தின் கதை. முழுமையான பொழுதுபோக்கு படமாக உருவாகும் இப்படத்தில் 6 வயது முதல் 60 வயது வரை உள்ள அனைவருக்கும் ஏற்ற அத்தனை அம்சங்களும் இருக்குமாம்.

 

கதை தேர்வில் கவனம் செலுத்தும் சாயாஜி ஷிண்டே, தனக்கு வரும் அனைத்து படங்களையும் ஏற்றுக்கொள்ளாமல் தேர்ந்தெடுத்து நடிப்பவர் என்பதால், அவர் இந்த படத்தில் நடிக்க சம்மதித்ததே இப்படத்தின் முதல் வெற்றியாக படக்குழுவினர் கருதுகின்றனர்.

 

தற்போது சென்னை பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமான ஹரிதுவார் செட் அமைத்து 150 அகோரிகள் பங்குபெறும் காட்சி படமாக்கப்பட்டது. இத்துடன் கேரளாவின் காட்டுப் பகுதியில் பெரிய செட் போடப்பட்டு 200 அகோரிகள் நடித்த பிரம்மாண்ட காட்சி ஒன்றும் படமாக்கப்பட்டுள்ளது.

 

படத்தில் இடம்பெறும் ஒரு மணி நேர கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் கண்களை மிரளவைக்கும்படி இருக்குமாம். தெலுங்கில் ‘சஹா’ படத்தின் மூலம் புகழ் பெற்ற சகுல்லா மதுபாபு தமிழில் வில்லனாக அறிமுகமாகிறார். இவரது உயரம் 6.5” ஆகும். நாயகியாக ஸ்ருதி ராமகிருஷ்ணன் நடிக்கிறார். இவர்களுடன் மைம் கோபி, சித்து, டார்லிங் மதனகோபால், ரியாமிகா, மாதவி, வெற்றி, கார்த்தி, கலக்கப்போவது யாரு சரத், டிசைனர் பவன் மற்றும் கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்ற புதிய கலைஞர்கள் பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

 

வசந்த் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு, கேரளாவில் புகழ் பெற்று வரும் நான்கு இசையமைப்பாளர்களின் கூட்டணியான ஃபோர் மியூசிக் இசையமைக்கின்றனர். ஜெயச்சந்திரன் கலையை நிர்மாணிக்க, ஆர்.பி.பாலா வசனம் எழுதுகிறார்.

 

இப்படத்தின் அனுபவம் குறித்து சாயாஜி ஷிண்டே கூறுகையில், “தமிழியில் பாரதி படம் எனக்கு அழுத்தமான அறிமுகம் கொடுத்தது. அதன் பிறகு குணச்சித்திரம், வில்லன், நகைச்சுவை என்று விதவிதமான பாத்திரத்திரங்களில் நடித்திருக்கிறேன். இந்தப் படத்தில் நடிக்கக் கேட்ட போது அவர்கள் சொன்ன கதை எனக்குப் பிடித்திருந்தது. இப்படத்தில் நான் ஓர் அகோரியாக அதாவது சிவனடியாராக நடிக்கிறேன். நான் அகோரியைச் சந்தித்து இருக்கிறேன், அவர்களிடம் ஆசியையும் பெற்று இருக்கிறேன். அப்படிப்பட்ட அகோரியாக நானே நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் பாத்திரமும் அதன் தோற்றமும் நடிப்பும் என் வாழ்வில் குறிப்பிட்டுச் சொல்லும்படி இருக்கும் என நம்புகிறேன்.” என்றார்.

 

தற்போது இறுதிக்கட்டத்தில் இருக்கும் ‘அகோரி’ வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கிறது.