Aug 23, 2017 02:23 PM

பண மோசடி வழக்கு - நடிகர் தாடி பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர்!

பண மோசடி வழக்கு - நடிகர் தாடி பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர்!

டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களில் சிறு சிறு காமெடி வேடங்களில் நடித்து வரும் தாடி பாலாஜியின் மனைவி, தனது கணவர் தன்னை கொடுமைப் படுத்துவதாகவும், அடித்து துன்புறுத்துவதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் பால்ஜியிடம் விசாரணை நடத்தினார்கள். 

 

இந்த நிலையில், திருப்பூர் நீதிமன்றத்தில் இன்று நடிகர் பாலாஜி ஆஜரானார். ஆனால், இது அவர் மனைவி அளித்த புகார் தொடர்பாக அல்ல. பண மோசடி வழக்கு தொடர்பானது.

 

கடந்த 2014 ஆம் ஆண்டு திருப்பூரில் இயங்கி வரும் ஏ.டி.எம்-ல் பணம் நிரப்பும் தனியார் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் மோசடியில் ஈடுபட்டனர். அதனையடுத்து அந்த தனியார் நிறுவனத்தின் மேலளர் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் அளித்த புகாரின் பேரில், விஷ்ணுவர்தன் என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்திய போது, அவர், மோசடி செய்த பணத்தில் கலை நிகழ்ச்சி நடத்துவதற்காக நடிகர் தாடி பாலாஜியிடம் 5 லட்ச ரூபாய் முன்பணம் கொடுத்ததாகக் கூறினார்.

 

அந்த வழக்கு திருப்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அதனையடுத்து அங்கு வழக்கு விசாரணைக்காக நடிகர் பாலாஜி இன்று ஆஜரானார். மேலும், இந்த வழக்கை அக்டோபர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.