Aug 25, 2017 11:45 AM

’விவேகம்’ சிறப்பு காட்சி - திரையிட்ட தியேட்டர்கள் மீது நடவடிக்கை!

’விவேகம்’ சிறப்பு காட்சி - திரையிட்ட தியேட்டர்கள் மீது நடவடிக்கை!

அஜித்தின் ‘விவேகம்’ நேற்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் அப்படத்தின் சிறப்பு காட்சிகள் பல திரையரங்குகளில் திரையிடப்பட்டது. பண்டிகை காலங்களின் போது வழக்கமாக திரையிடப்படும் காட்சிகளை காட்டிலும் ஒரு காட்சி கூடுதலாக, அதுவும் காவல் துறையிடம் உரிய அனுமதி பெற்று திரையிடப்படும்.

 

ஆனால், ‘விவேகம்’ படத்தை பொருத்தவரை உரிய அனுமதி பெறாமல் பல தியேட்டர்களில் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டதாகவும், அதுவும் 5 முதல் 7 காட்சிகள் வரை திரையிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், ரூ.1000 முதல் 2000 வரை விற்கப்பட்ட டிக்கெட்டில் ஜி.எஸ்.டி உள்ளிட்ட விவரங்கள் ஏதும் டிக்கெட்டில் குறிப்பிடபடவில்லை என்றும் கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், முறையான அனுமதி பெறாமல் 7 காட்சிகள் வரை திரையிடப்பட்டு இருந்தால் குழுக்கள் மூலம் ஆய்வு செய்து அந்த தியேட்டர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வருவாய்த் துறை முடிவு செய்துள்ளதாகவும், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதகாவும், ஜி.எஸ்.டி வரி உள்ளிட்ட விவரங்கள் டிக்கெட்டில் குறிப்பிடப்படவில்லை என்பது பற்றி புகார்கள் வந்தால், சம்மந்தப்பட்ட திரையரங்குகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தயாராக இருப்பதாகவும், வருவாய் துறை வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.