Aug 29, 2017 02:43 PM

மெட்ரோ ரயிலில் பயணிக்கும் ஆர்யா

மெட்ரோ ரயிலில் பயணிக்கும் ஆர்யா

சினிமா நட்சத்திரங்கள் பொது இடங்களூக்கு செல்வதை முற்றிலும் தவிர்த்து வருகிறார்கள். காரணம் ரசிகர்களின் அன்பு தொல்லை தான். இருந்தாலும் மற்ற மனிதர்களைப் போல சாதாரணமாக சாலையில் நடப்பது, பொது மக்களுடன் பொது சேவைகளை பயன்படுத்துவது போன்ற ஆசைகள் சினிமா நட்சத்திரங்களுக்கும் உண்டு. அவர்களின் இத்தகைய ஆசைகளை வெளிநாட்டில் தான் அவர்கள் பூர்த்தி செய்துக் கொள்கிறார்கள்.

 

ஆனால், அதிலும் சில நடிகர் நடிகைகள் சென்னை உள்ளிட்ட தமிழகத்திலே பொது இடங்களுக்கு சாதாரணமாக சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். அதில் முக்கியமானவர் ஆர்யா.

 

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான ஆர்யா, ஞாயிற்றுகிழமையானால் தனது நண்பர்களுடன் சென்னை பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் கால்பந்து விளையாடுவார். அதேபோல், கிழக்கு கடற்கரை சாலையில் தினமும் சைக்கிள் ஓட்டிக்கொண்டு செல்வார்.

 

தற்போது சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்வதை வழக்கமாக வைத்துள்ள ஆர்யா, சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கியதும் அதில் பயணித்து, அந்த புகைப்படங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த நிலையில், இன்றும் மெட்ரோ ரயிலில் பயணித்துள்ளார்.

 

சென்னை அண்ணா நகரில் வசிக்கும் ஆர்யா, அங்கிருந்து விமான நிலையத்திற்கு இன்று சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளவர், மெட்ரோ ரயிலில் பயணம் செய்வதால், எந்தவித டிராபிக்கிலும் சிக்காமல் விமான நிலையம் செல்ல முடிந்தது, என்று தெரிவித்துள்ளார்.

 

சுந்தர்.சி இயக்கத்தில் பிரம்மாண்டமான முறையில் உருவாகும் ‘சங்கமித்ரா’ படத்திற்காக கத்தி சண்டை, குதிரை ஏற்றம் போன்ற பயிற்சிகளை மேற்கொண்டுள்ள ஆர்யா, அமீர் இயக்கும் ‘சந்தனத்தேவன்’ படத்தில் ஜல்லிக்கட்டு வீரராக நடிக்கிறார்.