Nov 15, 2018 05:29 AM

முடியாத ‘சர்கார்’ சர்ச்சை! - விஜய் மீது புது வழக்கு

முடியாத ‘சர்கார்’ சர்ச்சை! - விஜய் மீது புது வழக்கு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மூன்றாவது முறையாக விஜய் நடித்த ‘சர்கார்’ மிகப்பெரிய வெற்றிப்படமாகியுள்ளது. கடந்த ஆண்டு தீபாவளிக்கு எப்படி விஜயின் ’மெர்சல்’ சர்ச்சைகளை ஏற்படுத்தி பெரிய வெற்றி பெற்றதோ அதுபோல், இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான ‘சர்கார்’ படமும் சர்ச்சையை உருவாக்கி பெரிய வெற்றி பெற்றுள்ளது.

 

படத்தில் ஆளும் அதிமுக அரசையும், அரசின் திட்டத்தையும் இழிவாக சித்தரித்ததாக குற்றம் சாட்டப்பட்டதோடு, படத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய அதிமுக தொண்டர்கள் சர்கார் பட போஸ்டர் கிழித்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, படத்தில் இருந்த சர்ச்சையான காட்சிகளை படக்குழு நீக்கியது. பிறகு மறு தணிக்கை செய்யப்பட்டு படம் வெளியானது.

 

இப்படி தமிழகத்தில் சர்கார் படத்திற்கு எதிராக எழுந்த பிரச்சினை அடங்கிய நிலையில், கேரள மாநிலத்தில் சர்கார் படத்திற்கு எதிராக புது பிரச்சினை கிளம்பியுள்ளது.

 

கேரள முன்னணி நடிகர்களே பொறாமை படும் அளவுக்கு அம்மாநிலத்தில் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழக ரசிகர்களை காட்டிலும் ஒரு படி மேலே சென்று விஜய் படத்தை அவர்கள் கொண்டாடி வருகிறார்கள். அப்படி தான் ‘சர்கார்’ படத்தையும் கொண்டாடி தீர்த்தார்கள்.

 

இந்த நிலையில், திருச்சூரில் உள்ள தியேட்டர் ஒன்றில் சர்கார் படத்தில் இடம்பெறும் விஜய் புகைப்பிடிப்பது போன்ற காட்சியின் புகைப்படம் ஒன்று இடம்பெறும் பேனர் வைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த பேனருக்கு திருச்சூர் சுகாதாரத் துறை எதிர்ப்பு தெரிவித்திருப்பதோடு, விஜய் மற்றும் கேரள விநியோகஸ்தர், தயாரிப்பாளர், தியேட்டர் உரிமையாளர் ஆகியோர் மீது வழக்கும் தொடர்ந்துள்ளதாம்.