Aug 30, 2017 07:04 AM

ஒரே ஒற்றுமைக் கொண்ட 4 படங்கள் - செப்டம்பர் 1ஆம் தேதி ரிலீஸ்!

ஒரே ஒற்றுமைக் கொண்ட 4 படங்கள் - செப்டம்பர் 1ஆம் தேதி ரிலீஸ்!

தமிழ் சினிமாவில் வாரம் குறைந்தது வாரம் 5 படங்கள் ரிலிஸாகிக் கொண்டிருந்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக ஒரு படத்தை தவிர வேறு எந்த படமும் வெளியாகவில்லை. அப்படம் தான் ‘விவேகம்’. 

 

கடந்த 24 ஆம் தேதி ’விவேகம்’ படம் வெளியாவதால், வெளியாக இருந்த மற்ற படங்கள் தங்களது ரிலீஸ் தேதியை மாற்றிக் கொண்டது. மேலும், அனைத்து திரையரங்க உரிமையாளர்களும் விவேகம் படத்தை ரிலீஸ் செய்யவே ஆர்வம் காட்டினார்கள்.

 

இதற்கிடையே, விவேகம் எதிர்ப்பார்த்த அளவுக்கு ரசிகர்களை கவராததால், வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி 4 புதிய படங்களை திரையரங்க உரிமையாளர்கள் ரிலீஸ் செய்கின்றனர்.

 

‘புரியாத புதிர்’, ‘ஒரு கனவு போல’, ‘மாயவன்’, ‘குரங்கு பொம்மை’ ஆகிய இந்த நான்கு படங்களின் இயக்குநர்களுக்கும் இது தான் முதல் படம் என்பது இப்படங்களுக்கு இருக்கும் ஒரே ஒற்றுமையாகும்.

 

விஜய் சேதுபதி, காயத்ரி நடிப்பில் உருவாகியுள்ள ‘புரியாத புதிர்’ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பலமுறை மாற்றம் செய்யப்பட்டதோடு, ‘மெல்லிசை’ என்ற தலைப்பில் உருவான இப்படத்தின் தலைப்பிலும் மாற்றம் செய்யப்பட்டது. விஜய் சேதுபதியின் படங்கள் தொடர்ந்து ஹிட் ஆவதால், இப்படத்தின் மீது சற்று எதிர்ப்பார்ப்பு உள்ளது.

 

விதார்த், பாரதிராஜா இணைந்து நடித்துள்ள படம் ‘குரங்கு பொம்மை’. நிதிலன் சுவாமிநாதன் இயக்கியிருக்கும் இப்படத்தில் ஹீரோயினாக டெல்னா டேவிஸ் நடித்துள்ளார். வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் விதார்த் நடித்து வருவதால் இப்படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருப்பதோடு, பாரதிராஜாவாலும் இப்படத்திற்கு பலம் கிடைத்துள்ளது.

 

தொடர்ந்து வெற்றிப் படங்களை தயாரித்து வரும் திருமுருகன் எண்டர்டெயின்மெண்ட் சி.வி.குமார் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘மாயவன்’. தயாரிப்பாளராக தொடர் வெற்றிகளை பெற்று வரும் சி.வி.குமார், முதல் முறையாக இயக்கியிருக்கும் இப்படத்தையும் ரசிகர்கள் எதிர்ப்பார்த்துள்ளனர்.

 

ராமகிருஷ்ணன், சவுந்தரராஜன் என்று வளரும் நடிகர்கள் நடித்துள்ள ‘ஒரு கனவு போல’ படத்தை சில திரையுலக பிரமுகர்கள் நல்ல படம் என்று பாராட்டியிருப்பதால், இப்படமும் சற்று எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தாலும், படத்தில் ஆர்ட்டிஸ் பலம் என்பது ரொம்ப குறைவாக உள்ளதால், மற்ற படங்களைக் காட்டிலும் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு குறைவு தான்.

 

என்னதான் எதிர்ப்பார்ப்பு இருந்தாலும், படத்தில் சரக்கு இல்லை என்றால் அப்படம் அஜித்தே நடித்திருந்தாலும் “அட போங்கப்பா...” என்று ரசிகர்கள் ஓரம் கட்டிவிடுவார்கள். அந்த வகையில், இந்த நான்கு படங்களில் ரசிக்ர்கள் எதை ஓரம் கட்டுகிறார்கள், எதை ஆஹா..ஓஹோ...,என்று பாராட்டுகிறார்கள் என்பது செப்டம்பர் 1 ஆம் தேதி தெரிந்துவிடும்.