Dec 12, 2018 06:45 AM

கன்னட ஹீரோவுக்கு கோலிவுட்டில் சிகப்பு கம்பளம் விரித்த விஷால்!

கன்னட ஹீரோவுக்கு கோலிவுட்டில் சிகப்பு கம்பளம் விரித்த விஷால்!

ஒவ்வொரு முறை காவிரி விவகாரம் வரும்போதெல்லாம், கர்நாடக விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் கன்னட திரைப்பட நடிகர்கள், அப்படியே தமிழகத்திற்கு தண்ணீர் தர கூடாது, என்று கூவுவது வழக்கமான ஒன்று தான் என்றாலும், வந்தாரை வாழ வைக்கும் தமிழகம், என்ற வார்த்தையை காப்பாற்றுவதற்காக, அனைத்தையும் மறந்துவிட்டு தமிழர்கள் அவ்வபோது கன்னடர்களுக்கு கை கொடுப்பதும் வழக்கமான ஒன்றாகிவிட்டது.

 

அந்த வரிசையில், கன்னட சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் யாஷ் என்ற நடிகருக்கு, கோடம்பாக்கத்தில் சிகப்பு கம்பளம் விரிக்கப்பட்டிருக்கிறது. விரித்தது வேறு யாருமல்ல, தென்னிந்திய நடிகர்கள் சங்க செயலாளரும், தயாரிப்பாளர்கள் சங்க தலைவருமான விஷால் தான்.

 

ஆம், யார் நடிப்பில் உருவாகியுள்ள கோலார் தங்க வயல் அதாவது ‘Kolar Gold Fields’ என்ற பெயரின் சுருக்கமான ‘கே.ஜி.எப்’ என்ற திரைப்படம் கன்னடம் மட்டும் இன்றி, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இதுவரை எந்த ஒரு கன்னட திரைப்படமும் வெளியாகத வகையில் மிகப்பெரிய அளவில் இப்படம் வெளியாகிறது.

 

வரும் டிசம்பர் 21 ஆம் தேதி அனைத்து மொழிகளிலும் உலகம் முழுவதும் வெளியாக உள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று இரவு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட விஷால், பத்திரிகையாளர்களுக்கு ஹீரோ யாஷை அறிமுகம் செய்து வைத்து பேசியவர், “’கே.ஜி.எப்’ என்ற இந்த திரைப்படம் கோலார் தங்க வயலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இது கன்னட சினிமாவுக்கான படம் மட்டும் அல்ல, உலக சினிமாவுக்கு நிகரான படம், அதனால் தான் இத்தனை மொழிகளில் வெளியிடுகிறார்கள். இதை தமிழில் நான் வெளியிட பெருமை கொள்கிறேன். இந்த படத்தை நான் பணத்திற்காக வெளியிடவில்லை. நடிகர் யாஷுக்காக தான் வெளியிடுகிறேன்.

 

நான், யாஷு அனைவரும் பத்து ஆண்டுகளாக நண்பர்களாக பழகி வருகிறோம். சினிமாவை கடந்து, கல்லூரி நண்பர்களை போல பழகி வருகிறோம். நான் எப்படியோ அதுபோல தான் யாஷும். என்னுடைய நிழல் தான் அவர். சென்னையில் 2015 ஆம் ஆண்டு வெள்ளம் வந்த போது நான் யாஷிடம் உதவி கேட்டேன். நிவாரண பொருட்கள் கொண்ட முதல் லாரியை அவர் தான் அனுப்பி வைத்தார். அதுமட்டும் அல்ல, கர்நாடகாவில் உள்ள கிராமம் ஒன்றில் அவர் மிகப்பெரிய அளவில் தூர் வாரும் பணியை மேற்கொண்டு தண்ணீரே இல்லாத அந்த கிராமத்தில் இப்போது தண்ணீர் வர வைத்திருக்கிறார். இப்படி அவர் பல உதவிகளை செய்து வருகிறார். அவரது நல்ல எண்ணத்திற்காகவும் இந்த படத்தை தமிழில் ரிலீஸ் செய்வதோடு, அவரை தமிழ் சினிமாவிலும் அறிமுகப்படுத்துகிறேன்.

 

KGF Press Meet

 

யாஷ், இப்படி பல உதவிகளை செய்தாலும், அவரை விட ஒரு ரியல் ஹீரோ இருக்கிறார். அவர் தான் யாஷின் தந்தை. தனது மகன் எவ்வளவு பெரிய ஹீரோவானாலும், தான் செய்யும் பஸ் டிரைவர் வேலையை அவர் இன்னமும் செய்துகொண்டு இருக்கிறார். இப்படிப்பட்டவர் தானே நிஜ ஹீரோ.

 

யாஷுக்கு நான் ஒன்றே ஒன்று தான் சொல்வேன், நல்ல படங்களை கொடுத்தால் தமிழ் மக்கள் மனதில் இடம் பிடித்துவிடலாம். அவர்கள் வேறு எதையும் எதிர்ப்பார்க்க மாட்டார்கள். அந்த வகையில், ‘கே.ஜி.எப்’ நிச்சயம் தமிழ் மக்களுக்கு பிடித்த படமாக இருக்கும்.” என்றார்.

 

நிகழ்ச்சியில் ஹீரோ யாஷ், ஹீரோயின் ஸ்ரீநிதி உள்ளிட்ட படக்குழுவினர்கள் பேசினார்கள்.