Dec 13, 2018 10:35 AM

இளையராஜாவுக்கு பராட்டு விழா! - திரையுலகிற்கு 2 நாட்கள் விடுமுறை

இளையராஜாவுக்கு பராட்டு விழா! - திரையுலகிற்கு 2 நாட்கள் விடுமுறை

இசைத்துறையில் பல்வேறு சாதனைகளை புரிந்த இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் பிரம்மாண்ட பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது. 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள இந்த பாராட்டு விழாவுக்காக 2 நாட்களுக்கு தமிழ்த் திரையுலகிற்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

 

இது குறித்து தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “1000 திரைப்படங்களுக்கு மேலும், 5000-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்தும், 500-க்கும் மேற்ப்பட்ட பாடல்களை தனது சொந்த குரலில் பாடியும் 5-முறை தேசிய விருதுகளை பெற்று திரையுலகில் இன்றும் மாபெரும் சாதனை படைத்துக் கொண்டிருக்கும் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக ’இசையராஜா-75’ என்ற பெயரில் அவரை கௌரவிக்கும் பொருட்டு இந்திய அளவில் பிரம்மாண்டமான இசைவிழாவை வெகு சிறப்பாக நடத்த உள்ளோம்.

 

மேற்படி விழாவானது, 2019-பிப்ரவரி மாதம் 2-3ம் தேதிகளில் சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேற்படி விழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட திரையுலகில் உள்ள அனைத்து முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் திரு.இளையராஜா அவர்களுடன் பணிபுரிந்த இயக்குனர் கள், இசை கலைஞர்கள் பங்கு பெற்று அவருக்கு பெருமை சேர்க்க இருக்கிறார்கள்.

 

எனவே மேற்படி பிப்ரவரி 2-3 தேதிகளில் அனைத்து படப்பிடிப்புகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு தமிழ்த் திரையுலகில் சார்பாக அனைவரும் கலந்துகொண்டு விழாவை சிறப்பிக்க வேண்டுமாய் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.