Sep 05, 2017 02:00 PM

பேச்சுவார்த்தையில் தீர்வு : பெப்ஸி வேலை நிறுத்தம் வாபஸ் ஆக வாய்ப்பு!

பேச்சுவார்த்தையில் தீர்வு : பெப்ஸி வேலை நிறுத்தம் வாபஸ் ஆக வாய்ப்பு!

கடந்த சில வாரங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் சங்கத்திற்கும், தென்னிந்திய தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கும் (பெப்ஸி) இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, பெப்ஸி வேலை நிறுத்தத்தை தொடங்கியது. பிறகு பேச்சுவார்த்தை நடந்து வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டு படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டன.

 

இந்த நிலையில், திரைப்படம் தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் திரைப்பட தொழிலில் பங்கேற்கலாம், என்று தயாரிப்பாளர் சங்கம் சார்பில் விளம்பரம் கொடுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெப்ஸி அமைப்பு, கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியதோடு, இன்று (செப்.05) சென்னை கண்டன ஆர்பாட்டத்தையும் நடத்த திட்டமிட்டிருந்தது.

 

இதற்கிடையே, தயாரிப்பாளர்கள் சங்கம், இயக்குநர்கள் சங்கம் மற்றும் பெப்ஸி அமைப்பினரிடையே நேற்று இரவு பேச்சு வார்த்தை நடைபெற்றது. நள்ளிரவு 12 மணி வரை நடைபெற்ற இந்த பேச்சு வார்த்தையில் சுமூகமான முடிவு எட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

இதன் மூலமாக, பெப்ஸி அமைப்பு இன்று நடத்த இருந்த கண்டன ஆர்பாட்டத்தை கைவிட்டதோடு, வரும் வெள்ளிக்கிழமை வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.