Sep 10, 2017 03:13 PM

கதாநாயகியை கரம் பிடிக்கும் இசையமைப்பாளர்!

கதாநாயகியை கரம் பிடிக்கும் இசையமைப்பாளர்!

‘பாரிஜாதம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான தரண், தனது முதல் படத்திலேயே தன்னை திறமை மிக்க இசையமைப்பாளர் என்பதை நிரூபித்தார். தொடர்ந்து ‘போடா போடி’, ‘நாய்கள் ஜாக்கிரதை’, ‘ஆஹா கல்யாணம்’ என தனது தரமான இசையின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கு என்று தனி இடத்தை பிடித்த தரண், தற்போது தனது 25 வது படத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

 

படங்களின் எண்ணிக்கையில் 25-ஐ எட்டிய தரண், விரைவில் திருமண பந்தத்தில் இணைய இருக்கிறார். சென்னையை சேர்ந்த மாடல் மற்றும் ஆடை வடிவமைப்பாளரும் நடிகையுமான தீக்‌ஷிதாவை தரண் திருமணம் செய்ய உள்ளார்.

 

தரண் - தீக்‌ஷிதா திருமணம் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து செப்டம்பர் 16 ஆம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

 

திருமணம் குறித்து பேசிய தரண், “நான் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி 11 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை 25 படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன். சமீபத்டில் தான் என் 25 வது படமான ‘பிஸ்தா’ படத்தின் இசைக் கோர்ப்பை முடித்தேன். என் எல்லா தருணங்களிலும் என் குடும்பம் எனக்கு பக்க பலமாக இருந்திருக்கிறது.” என்று தெரிவித்தார்.

 

மணப்பெண் தீக்‌ஷிதா பேசுகையில், “2012 ஆம் ஆண்டு முதல் நான் ஒரு மாடலாகவும், நடிகையாகவும் இருந்து வருகிறேன். நகர்வலம், ஆகம் என இரண்டு தமிழ்ப் படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறேன். தற்போது மாடலிங் மற்றும் விளம்பர படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணி புரிந்து வருகிறேன். மண வாழ்க்கையில் இணைவது மகிழ்ச்சி அளிக்கிறது.” என்றார்.