Sep 10, 2017 09:55 PM

ஜோதிகா படத்தில் சிம்பு!

ஜோதிகா படத்தில் சிம்பு!

திருமணத்திற்குப் பிறகு நடிப்புக்கு முழுக்குப் போட்ட ஜோதிகா, தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். அவர் ரீஎண்ட்ரியான ‘36 வயதினிலே’ மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அதன்படி, தற்போது ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘மகளிர் மட்டும்’ விரைவில் வெளியாக உள்ளது.

 

’குற்றம் கடிதல்’ இயக்குநர் பிரம்மா இயக்கியுள்ள இப்படத்தில் சரண்யா பொன்வன்னன், ஊர்வசி, பானுப்ரியா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் மாமியார், மருகளுக்கு இடையே உள்ள பாச உணர்வை சொல்லும் படமாக உருவாகியுள்ளது.

 

இப்படத்தை அடுத்து பாலா இயக்கத்தில் நாச்சியார் படத்தில் நடித்து வரும் ஜோதிகா, நாச்சியார் படத்திற்கு பிறகு தன்னை ஆக்‌ஷன் ஹீரோயினாக ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

 

இதற்கிடையே மணிரத்னம் இயக்கும் மல்டி ஸ்டார் படத்திலும் ஜோதிகா ஒப்பந்தமாகியுள்ளார். நான்கு ஹீரோக்கள் நடிக்கும் இப்படத்திற்கு துல்கர் சல்மான், அரவிந்த் சுவாமி, விஜய் சேதுபதி ஆகிய மூவர் ஒப்பந்தமாகியுள்ள நிலையில், நான்காவது ஹீரோவை மணிரத்னம் தேடி வந்தார். இந்த நிலையில், அந்த நான்காவது ஹீரோவாக சிம்பு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

’சரவணா’, ‘மன்மதன்’ ஆகிய இரண்டு படங்களில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்த ஜோதிகா, இப்படத்தின் மூலம் மூன்றாவது முறையாக அவருடன் இணைந்து நடிக்க உள்ளார்.