Sep 11, 2017 07:24 AM

மாணவி அனிதா வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய விஜய்!

மாணவி அனிதா வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய விஜய்!

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தற்கொலை செய்துகொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்தால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது. நீட் தேர்வுக்கு எதிராக நடத்தப்படும் இந்த போராட்டங்களில் கல்லூரி, பள்ளி மாணவர்கள், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் பலர் கலந்துக்கொண்டு வருகிறார்கள்.

 

சென்னையிலும், திரையுலகினர் பலர் அனிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். மேலும், நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ், அனிதா குடும்பத்தாருக்கு ரூ.15 லட்சம் நிதி வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், நடிகர் விஜய் அனிதாவின் வீட்டுக்கு நேரில் சென்று அவர்து தந்தை மற்றும் சகோதரருக்கு ஆறுதல் கூறியுள்ளார். அனிதாவின் வீட்டு தரையில் அமர்ந்தவாறு, அவரது தந்தையின் தோளில் கைபோட்டு விஜய் பேசுவது போன்ற புகைப்படங்கள் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

 

பழைய ரூபாய் நோட்டு தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிரடி காண்பித்த விஜய், சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தில், முகத்தை மூடிக்கொண்டு போராட்டக்காரர்களுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.