Sep 12, 2017 10:11 AM

சூர்யாவுக்கு பயத்தை ஏற்படுத்திய ‘மகளிர் மட்டும்’ - பட்டு புடவையின் பின்னணி!

சூர்யாவுக்கு பயத்தை ஏற்படுத்திய ‘மகளிர் மட்டும்’ - பட்டு புடவையின் பின்னணி!

தமிழ்த் திரையுலகில் இருக்கும் தயாரிப்பாளர்களில் சுமார் ஒரு டஷன் தயாரிப்பாளர்கள் நடிகர் சூர்யா குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள். ஸ்டுடியோ க்ரீன், ட்ரீம் வாரியர், பொட்டேன்ஷியல் என்று பல திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களை நடத்தி வருவது சூர்யாவின் உறவினர்கள் தான்.

 

இதற்கிடையில், சூர்யாவும் சொந்தமாக 2டி எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனத்தை ஆரம்பித்து படங்கள் தயாரித்து வருகிறார். இந்த நிறுவனத்தின் மூலம் அவர் தயாரித்த ‘36 வயதினிலே’ படம் வெற்றி பெற்றாலும், அதற்கு பிறகு அந்நிறுவனம் தயாரித்த படங்கள் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதிலும் அந்நிறுவனம் வெளியிட்ட முதல் படமான ‘கடுகு’ மிகப்பெரிய தோல்வியை தழுவியது.

 

இந்த நிலையில், சூர்யாவின் 2டி நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மகளிர் மட்டும்’ விரைவில் வெளியாக உள்ள நிலையில், அப்படம் சூர்யாவுக்கு சற்று பயத்தை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது. 

 

பல கோடிகளை செலவு செய்து எடுக்கப்படும் முன்னணி ஹீரோக்களின் படங்களே மண்ணை கவ்வும் சூழலில், பெண்களை மட்டுமே டார்க்கட் பண்ணி எடுக்கப்பட்டிருக்கும் ‘மகளிர் மட்டும்’ வியாபார ரீதியாக எடுபடுமா? என்ற கேள்வியோடு, சற்று பயத்தையும் 2டி க்கு ஏற்படுத்தியிருப்பதாக பேசப்பட்டு வருகிறது.

 

இதை நிரூபிக்கும் வகையில், ’மகளிர் மட்டும்’ ஓடும் தியேட்டர்கள் அனைத்திலும், ஒவ்வொரு காட்சிக்கும் ஒரு பட்டு புடவை பரிசு வழங்கப்படும் என்று தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது. 

 

இதற்கு முன்பாக சூர்யா தயாரித்த ’36 வயதினிலே’ படமும் பெண்களுக்கான படமாக இருந்தாலும், அப்படத்திற்கு இதுபோன்ற பரிசு திட்டங்கள் ஏதும் அறிவிக்கவில்லை. ஆனால், ‘மகளிர் மட்டும்’ படத்திற்கு இப்படி பரிசு திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது என்றால், படம் எதிர்ப்பார்த்த மாதிரி வந்திருக்காது, அதனால் தான் பரிசு அறிவித்து, மக்களை ஈர்க்க திட்டமிடுகிறார்கள், என்று கோடம்பாக்க டீ கடைகளில் பேச்சு அடிபடுகிறது.

 

ஆக மொத்தத்தில், பரிசாக கொடுக்க இருக்கும் பட்டுப்புடவையில் இருக்கும் ஜொளிப்பு, மகளிர் மட்டும் படத்தில் இருக்காது என்பதை தான் இந்த பரிசு பட்டுப்புடவை சூசகமாக சொல்கிறதோ!