Sep 14, 2017 07:18 AM

அட்ஜஸ்ட் செய்தால் பட வாய்ப்பு என்றார்கள் - ஐஸ்வர்யா ராஜேஷ் பேட்டியால் சர்ச்சை!

அட்ஜஸ்ட் செய்தால் பட வாய்ப்பு என்றார்கள் - ஐஸ்வர்யா ராஜேஷ் பேட்டியால் சர்ச்சை!

சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷ், ‘காக்கா முட்டை’ படத்தின் மூலம் பிரபலமாகிவிட்டார். அப்படத்தில் இரண்டு சிறுவர்களுக்கு அம்மாவாக நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ், தொடர்ந்து சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தாலும், கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வந்தார்.

 

இந்த நிலையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நான் சினிமா வாய்ப்பு தேடிய போது, அட்ஜஸ்ட் செய்ய சொன்னார்கள், என்று கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

 

சமீபத்தில் நடிகைகள் சினிமா துறையில் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து ஊடக பேட்டிகளில் கூறி பரபரப்பை ஏற்படுத்தும் நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷும் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமை குறித்து கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

இது குறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “தென்னிந்திய படங்களை போன்று பாலிவுட்டில் உள்ளவர்கள் நடிகைகள் சிகப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பது இல்லை. தற்போது பல விஷயங்கள் மாறியுள்ளது.

 

5 ஆண்டுகளுக்கு முன்பு சினிமா வாய்ப்பு தேடிய போது என்னை அட்ஜஸ்ட் செய்யச் சொன்னார்கள். இந்த பிரச்சனை எனக்கு இருந்தது. ஆனால் தற்போது சமூக வலைதளங்களில் தெரிவித்து அசிங்கப்படுத்திவிடுவார்கள் என்று அவர்கள் பயப்படுகிறார்கள்.

 

தற்போது பட வாய்ப்புகளுக்காக அட்ஜஸ்ட் செய்யத் தேவையில்லை. 2017ம் ஆண்டிலும் நடிகர், நடிகைகளுக்கு அளிக்கப்படும் சம்பளத்தில் பெரும் வித்தியாசம் உள்ளது.

 

முன்னணி நடிகர்கள் படம் ஒன்றுக்கு ரூ.10 கோடி வாங்கினால், முன்னணி நடிகையான நயன்தாராவுக்கு ரூ. 3 கோடி மட்டுமே கொடுக்கப்படுகிறது. இந்த விஷயம் மாறவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.

 

தற்போது விக்ரமுடன் துருவ நட்சத்திரம், வெற்றிமாறனின் வடசென்னை, இது வேதாளம் சொல்லும் கதை, மணிரத்னத்தின் படம் என்று தமிழில் மட்டும் இன்றில் பாலிவுட்டிலும் சில படங்களில் ஐஸ்வரயா ராஜேஷ் நடித்து வருகிறார்.