Sep 16, 2017 06:50 PM

சிறை பின்னணியில் நடக்கும் ‘திட்டிவாசல்’

சிறை பின்னணியில் நடக்கும் ‘திட்டிவாசல்’

கே 3 சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஸ்ரீனிவாசராவ் தயாரித்துள்ள படம் ‘திட்டிவாசல்’. மலைவாழ் மக்களின் பிரச்சினைகள், போராட்டங்கள் மற்றும் அவர்களின் வாழ்வியல் பற்றி பேசும் இப்படத்தின் கதை பிடித்துப் போய் தன் நெருக்கடியான தேதிகளை அனுசரித்து நாசர் கால்ஷீட் கொடுத்து நடித்துக் கொடுத்துள்ளார். ‘திட்டிவாசல்’ என்றால் சிறையில் இருக்கும் சிறிய கதவுடைய வழியைக் குறிப்பதாகும்.

 

படம் குறித்து இயக்குநர் எம்.பிரதாப் முரளி கூறுகையில், “போலீஸ் ஸ்டேஷனில் போடப்படும் எப்.ஐ.ஆர் எனப்படும் முதல் தகவல் அறிக்கையைப் பொறுத்தே வழக்கின் தன்மை இருக்கும். ஆனால் அதிலுள்ள உண்மை நிலை தெரிவதற்குள் பல்வேறு சம்பவங்கள் நடக்கும். அந்தப் பாதிப்புகள் பற்றிய கதைதான் திட்டிவாசல் படம்.

 

இது முழுக்க முழுக்க  சிறை பின்னணியில் நடக்கும் கதை. இது மலைவாழ் மக்களின் வாழ்க்கையையும் பிரச்சினைகளையும் யதார்த்தமாகப் பேசுகிறது.

 

இன்று மக்களிடம் உள்ள பிரச்சினைகளும் போராட்டங்கள் நிறைந்த வாழ்க்கைச் சூழலும் தான் அவர்களில் சிலரை மாவோயிஸ்ட், நக்சலைட் என்று தீவிரவாத வழிகளில் செல்ல வைக்கிறது. ஆனால் என்றுமே வன்முறை பிரச்சினைகளுக்குத் தீர்வாகாது. ஜனநாயக புரட்சி வழியில் தான் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். அது எப்படி சாத்தியம்? சிறு சிறு குழுக்களாக இயங்கும் மக்கள் ஒரே சக்தியாக இணைய வேண்டும். அப்போது வெற்றி நிச்சயம் என்று  படத்தில் சொல்லியிருக்கிறோம்'' என்கிறார்.

 

படத்தில் நாசர் முக்கிய பாத்திரம் ஏற்றுள்ளார். முன்னணி கதை மாந்தர்களாக மகேந்திரன், கன்னட நடிகர் சின்னிவினோத்  வருகிறார்கள். தனு ஷெட்டி, ஐஸ்வர்யா, அஜய்ரத்னம், தீரஜ் அஜய்ரத்னம், ஸ்ரீதர்  ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

 

தனி ஒருவரின் கதையாக அல்லாமல், ஒரு விளிம்புநிலை சமூகம் சார்ந்த பதிவாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜி.ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவு செய்ய, ஹரீஷ், சத்தீஷ், ஜெர்மன் விஜய் ஆகிய மூன்று பேர் இசையமைத்துள்ளனர். நா.முத்துக்குமார், சதீஷ், சிவ முருகன் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். தில் சத்யா, ராஜு ஆகியோர் நடனம் அமைக்க, வயலண்ட் வேலு, திரில்லர் மஞ்சு ஆகியோர் ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைத்துள்ளனர்.

 

சென்னை, கோத்தகிரி, கேரளா, வயநாடு, கோவா போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. 35 நாட்களில் காடு, மலை சார்ந்த பகுதிகளில் முழு படத்தையும் முடித்துள்ளனர்.

 

வரும் செப்டம்பர் 22 ஆம் தேதி இப்படம் வெளியாகிறது.