Sep 22, 2017 06:57 AM

முதல்வராக விரும்புகிறேன் - கமல்ஹாசன் அதிரடி பேட்டி!

முதல்வராக விரும்புகிறேன் - கமல்ஹாசன் அதிரடி பேட்டி!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், நேற்று சென்னைக்கு வந்து நடிகர் கமல்ஹாசனை சந்தித்து பேசினார். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த சந்திப்பிற்கு பிரகு ஊடகங்களிடம் பேசிய கமல்ஹாசன், அரவிந்த் கெஜ்ரிவால் என்னை சந்திக்க நினைத்தது, எனக்கு கிடைத்த பெரும் பாக்கியம், என்றார்.

 

மேலும், சில தேசிய செய்தி தொலைக்காட்சிகளுக்கு கமல்ஹாசன், அளித்த சிறப்பு பேட்டியில், நான் அரசியல்லுக்கு வருவது உறுதி, தமிழக மக்களுக்காக முதல்வராக விரும்புகிறேன், என்று அதிரடியாக கூறியுள்ளார்.

 

டைம்ஸ் நவ் டிவி சேனலுக்கு கமல் அளித்த பேட்டியில், “மக்களின் ஒத்துழைப்பு இன்றி எதையுமே செய்ய முடியாது, ஏன் நான் அவர்களுக்காக உதவ நினைப்பதில் பாதியைக் கூட நிறைவேற்ற முடியாது. என்னைப் பொறுத்தவரையில் நான் பகுத்தறிவாளன்.

 

கடவுள் இருக்கிறாரோ இல்லையோ இது எல்லாவற்றையும் விட நான் மக்களின் அன்பை மதிக்கிறேன். நான் மக்களுக்கு உதவுவதற்காக எந்த அளவிற்கு வேண்டுமானாலும் கீழே இறங்கிச் செல்லத் தயாராக இருக்கிறேன். நான் மக்களுக்காக உதவும் ஒரு கருவி அதைத் தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை.” என்றார்.

 

அதே போல், இந்தியா டுடே டிவி சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியில், “அரசியலுக்குள் நுழைவது என்பது முள் கிரீடத்தை தலையில் சுமப்பதற்கு சமமானது. மக்களைப் பொருத்தவரை அவர்களின் பிரச்னைகளை யாரும் கண்டு கொள்வதில்லை என்றே நினைக்கின்றனர். இடது சாரியா, வலது சாரியா அல்லது வேறு சிந்தனையுடையவனா என்பதையெல்லாம் மக்கள் பார்க்கவில்லை.

 

என்னைப் பொருத்தவரை கருப்பு தான் என்னுடைய நிறம். அதில் தான் காவி உட்பட அனைத்து நிறங்களும் உள்ளன. அரசியல் ஒரு புதைகுழி என்பதை மாற்றி அனைவருக்குமானதாக மாற்ற வேண்டும் என்பதே இப்போதைய தேவையாக உள்ளது.

 

அரசியல்வாதி ஆவதற்கு முன்னர் என்னை நான் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்காக மக்களை நேரில் சந்திக்க உள்ளேன், என்னுடைய மக்கள் சந்திப்பு பயணத்தை விரைவில் அறிவிப்பேன்.

 

உடனடியாக எந்த மாற்றத்தையும் செய்து விடுவேன் என்று நான் உறுதியளிக்கவில்லை. ஆனால் மாற்றத்திற்காக நான் தலைவணங்கத் தயாராக இருக்கிறேன் என்பதையே சொல்கிறேன்.” என்று தெரிவித்தார்.

 

கமல்ஹாசனின் இந்த அதிரடியான பேட்டியின் மூலம் தமிழக அரசியலில் பெரும் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது.