Sep 25, 2017 08:12 PM

அமீர் கருத்துக்கு சீமான் எதிர்ப்பு - பரபரப்பை ஏற்படுத்திய ‘பாடம்’ விழா!

அமீர் கருத்துக்கு சீமான் எதிர்ப்பு - பரபரப்பை ஏற்படுத்திய ‘பாடம்’ விழா!

இன்றைய கல்வி முறையில் இருக்கும் குறைபாடுகள் என்ன? அவற்றால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன? போன்றவற்றை சொல்லும் படமாக உருவாகியிருக்கிறது ‘பாடம்’. மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர்.அப்துல் கலாம் சொன்ன கருத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில், இந்திய கல்வி முறையில் மாற்றம் வேண்டும், என்ற கருத்து மிக அழுத்தமாக சொல்லப்பட்டிருக்கிறது.

 

அறிமுக நடிகர் கார்த்திக் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் மோனா ஹீரோயினாக நடித்திருக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் விஜித் நடிக்க, இயக்குநர்கள் நாகேந்திரன், ஆர்.என்.ஆர்.மனோகர், ஜாங்கிரி மதுமிதா, யாசிகா, கைஞர் பிறைசூடன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

 

கணேஷ் ராகவேந்திரா இசையமைத்துள்ள இப்படத்திற்கு மனோ ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜிபின் பி.எஸ் தயாரித்துள்ள இப்படத்தை ராஜசேகர் இயக்கியுள்ளார்.

 

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் சீமான், அமீர், பாலாஜி மோகன், சீனுராமசாமி, கார்த்திக் சுப்புராஜ், நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ், கவிஞர் பிறைசூடன் பொற்கோ, வேல்முருகன் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.

 

நிகழ்ச்சியில் ஒளிபரப்பட்ட மூன்று பாடல்களும், படத்தின் டிரைலரும் விருந்தினர்களை கவர்ந்ததோடு, படத்தின் கரு என்ன என்பதையும் டிரைலர் தெளிவாக புரிய வைத்தது.

 

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் அமீர், “இன்றைய சூழ்நிலையில் பிற மொழிகள் கற்கவேண்டும். காரணம் ஒரு உணவு விடுதிக்கு சென்றால் அங்கு இருப்பவர்களுக்கு தமிழ் தெரியவில்லை, அதை விட இன்று தமிழில் நடிக்கும் நாயகிகளுக்கு தமிழ் தெரியவில்லை. அவர்களிடம் பேசவேண்டும் என்றாலும் ஆங்கிலம் தெரியவேண்டும் என்ற சூழ்நிலை தான் உள்ளது. அது மட்டும் இல்லாமல் உலகில் வேறு எங்கு செல்ல வேண்டும் என்றாலும் ஆங்கிலம் தெரியவேண்டிய சூழ்நிலை. ஆங்கிலம் தெரியாமல் நான் நிறைய இடங்களில் அவமானப்பட்டு இருக்கிறேன். ஆகவே தமிழ் மொழியை மூச்சாக வைப்போம், ஆகிலத்தை தேவைக்கு பயன்படுத்துவோம்.” என்றார்.

 

பிறகு பேசிய சீமான், அமீரின் கருத்துக்கு எதிரான கருத்தை முன் வைத்தார். அவர் பேசுகையில், “நாம் ஏன் பிற மொழிகளை கற்க வேண்டும். மற்றவர்களை நாம் தமிழ் படிக்க வைப்போம். அமெரிக்காவில் நான் தமிழில் தான் பேசினேன் எனக்கு மரியாதை கிடைத்தது. எனவே நாம் அவர்களை தமிழ் பேச வைப்போம்” என்ரார்.

 

இயக்குநர் பாலாஜி மோகன் பேசுகையில், “இன்றைய பள்ளிகளில் பாடங்கள் மற்றும் மொழியும் திணிக்கப்படுகிறது. ஒரு மாணவனுக்கு எதில் ஆர்வம் இருக்கு என்று தெரிந்து அவனுக்கு அந்த பாடத்தை கற்பிக்க வேண்டும். அந்த கருத்தை சொல்ல வரும் இந்த பாடம் நிச்சயம் மாணவர்களை கவரும் என்பதில் ஐயம்  இல்லை. இந்த படம் மிக பெரிய வெற்றி பெறும்.” என்றார்.

 

இயக்குநர் சீனுராமசாமி பேசும் போது, “இன்றைய  மாணவர்களின் கல்வி அவலநிலையை சொல்லும் படமாக தான் இந்த படத்தை நான் பார்கிறேன்,  காரணம் இன்று குழந்தைகள் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்றால் தயங்குகிறார்கள். காரணம் அவர்கள் எடையை விட அவர்களின் பள்ளிகூட புத்தக எடை அதிகமாக உள்ளது. அதோடு அவர்களின் எண்ணங்களுக்கு புறம்பாக உள்ளது. இதை மாற்ற வேண்டும் இதை இந்த படம் நிச்சயமாக வலியுறுத்தும்” என்று தெரிவித்தார்.