Sep 25, 2017 08:40 PM

சின்னத்திரை மீனாட்சியை இனி வெள்ளித்திரையில் பார்த்து ரசிக்கலாம்!

சின்னத்திரை மீனாட்சியை இனி வெள்ளித்திரையில் பார்த்து ரசிக்கலாம்!

புதுயுகம் தொலைக்காட்சியில்  கிட்டத்தட்ட 100 எபிசோடுகளை கடந்து வெற்றி நடை போடும் நிகழ்ச்சி என்றால் அது ‘ருசிக்கலாம் வாங்க’ நிகழ்ச்சி தான். திங்கள் முதல் வெள்ளிவரை மதியம் 1:00 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு, சுவாரஸ்யம் குறையாமல் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் மீனாட்சியும் முக்கிய காரணம்.

 

பொதுவாக தொகுப்பளினிகள் என்றாலே படபடவென பொரிந்து தள்ளுவார்கள். பாதி புரியும், பாதி புரியாது. ஆனால் அதிலிருந்து மாறுபட்டு அனைவருக்கும் புரியும் விதமாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில், பேச்சில் நிதானம் காட்டுகிறார். அதற்காகவே அவருக்கு நிறைய பாராட்டுக்கள் குவிகின்றன.

 

சொந்தமாக விளம்பர நிறுவனம் நடத்திவரும் மீனாட்சி, ஒரு நாள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க வேண்டிய தொகுப்பாளினி வராமல் போக அந்த நெருக்கடியைச் சமாளிக்க இவரே தொகுத்து வழங்கினாராம். தொடர்ந்து அப்படியே பிஸியான வி.ஜே-வாக மாறிவிட்டார் மீனாட்சி. இதற்கிடையே அழகி, பொம்மலாட்டம், பொன்னூஞ்சல், கங்கா என அடுத்தடுத்து சீரியல்களிலும் வாய்ப்பு வர அவற்றிலும் ஒரு ரவுண்டு வந்துவிட்டார்.

 

தற்போது வெள்ளித்திரையில் கால் பதிக்க வேண்டும் என்பதற்காக சமீபகாலமாக சீரியல் உலகில் இருந்து சற்றே ரிலாக்ஸ் ஆனாலும், கூட ‘ருசிக்கலாம் வாங்க’ நிகழ்ச்சியை மட்டும் தொடர்ந்து நடத்தி வருகிறார் மீனாட்சி. மீடியாவுக்குள் வருவதற்கு முன் அப்படி ஆக வேண்டும், இப்படி ஆகவேண்டும் என எதையும் பிக்ஸ் பண்ணிக்கொள்ளாத மீனாட்சிக்கு தானாகவே வாய்ப்புகள் தேடிவந்தன. தற்போது அனைவர்க்கும் தெரிந்த முகமாக மாறிவிட்ட மீனாட்சி, அதை பயன்படுத்தி சினிமாவிலும் தனது அடுத்த இன்னிங்ஸை ஆரம்பிப்பதற்கான வேலைகளில் மும்முரமாக இருக்கிறார்.