Sep 28, 2017 10:27 AM

மணிமண்டபம் விவகாரம் - முதல்வர் மீது சிவாஜி கணேசன் குடும்பத்தார் அதிருப்தி!

மணிமண்டபம் விவகாரம் - முதல்வர் மீது சிவாஜி கணேசன் குடும்பத்தார் அதிருப்தி!

வரும் அக்டோபர் 1 ஆம் தேதி திறக்கப்பட உள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசனின், மணிமண்டபத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைக்காமல், அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைப்பார் என்று அறிவிப்பால், சிவாஜி கணேசனின் குடும்பத்தார் அதிருப்தி அடைந்துள்ளனர்.

 

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று நீண்ட நாளாக கோரிக்கை விடப்பட்டது. இதனையடுத்து கடந்த ஆண்டு மணி மண்டபம் கட்டும் பணி தொடங்கியது, இந்தப் பணி முடிந்துள்ள நிலையில், சிவாஜி கணேசனின் 90 வது பிறந்தநாளான அக்டோபர் 1 ஆம் தேதி மணிமண்டபம் திறந்து வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

 

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மணி மண்டபத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைப்பார் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் நேற்று மாலை வெளியான அரசு அறிவிப்பில் அமைச்சர் கடம்பூர் ராஜூ சிவாஜிகணேசன் மணிமண்டபத்தை திறந்து வைப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

இந்த அறிவிப்புற்கு நடிகர் சிவாஜி கணேசன் குடும்பத்தார் அதிருப்தி தெரிவித்துள்ளனர். முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மணிமண்டபத்தை திறந்து வைக்காதது அதிருப்தி அளிப்பதாக சிவாஜி கணேசனின் இளைய மகன் நடிகர் பிரபு, பேரன் நடிகர் விக்ரம் பிரபு மற்றும் அவரது குடும்பத்தார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளனர்.

 

ஏற்கனவே, மெரினா கடற்கரை சாலையில் இருந்த சிவாஜி கணேசன் சிலை அகற்றப்பட்டதற்கு திரையுலகினர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தற்போது அவரது மணிமண்டபத்தை முதல்வர் திறந்து வைக்காதது, தமிழ் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.